மரிச்சுக்கட்டி மக்கள் போராட்டத்தில் குதிப்பு
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
“மன்னார், முசலி பிரதேசத்தில் உள்ள பூர்வீக இடங்களை வில்பத்து வன பகுதிக்கான எல்லையாக இணைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கையொப்பமிட்ட வர்த்தகமானி அறிவித்தலை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து, மரிச்சுக்கட்டி, பாலைக்குழி மற்றும் கரடிக்குழி மக்கள், செவ்வாய்க்கிழமை மாலை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
“பல வருட காலமாக மக்கள் வாழ்ந்த காணிகளை, வில்பத்து பிரதேசமாக பிரகடனப்படுத்தியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்” என குறித்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
“ஒரு போதும் எங்கள் தாய் மண்ணை விட்டு வெளியேற மாட்டோம். இத தொடர்பில், எமது கோரிக்கையை பிரதேசத்தில் உள்ள அனைத்து சமூக மட்ட அமைப்புகளும் இணைந்து, ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளோம்.
கடந்த ஆட்சி காலத்தில் எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட நிலையில், நல்லாட்சி அரசாங்கமும் எங்களுக்கு நல்லதை செய்யாமல், பரம்பரையாக வாழ்ந்த காணியினை கொள்ளை அடிக்கும் சூழ்சிகளை செய்துள்ளது.
எங்கள் போராட்டத்துக்கு, கட்சி அரசியலுக்கு அப்பால் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்” என, அந்த மக்கள் தெரிவித்தனர்.