மன்னார் மாவட்ட வேலையில்லா பட்டதாரிகளின் கவனயீர்ப்புப் பேரணி
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையில்லாப் பட்டதாரிகள் ஒன்றிணைந்து, கவனயீர்ப்புப் பேரணியில், நேற்றுக் (28) காலை ஈடுபட்டிருந்தனர்.
மன்னார் மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பேரணியானது, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாகவிருந்து ஆரம்பமாகி பிரதான வீதியூடாக மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது.
இதன்போது, பேரணியில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பட்டதாரிகள், பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு பேரணியில் கலந்து கொண்டனர்.
இப்பேரணிக்கு ஆதரவு தெரிவித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதனை அடுத்து, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் பட்டதாரிகள் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.
பின்னர், போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோரிடமும் மகஜர் கையளிக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் 350க்கும் மேற்பட்ட பட்டதாரிகள், வேலைவாய்ப்பின்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது.