எப்போது திரும்பி வரும் ரூ.2 லட்சம் கோடி?
வங்கிகளின் வாராக்கடனை வசூல் செய்ய வந்திருக்கும், வலிமையான ஆயுதம் தான், புதிய திவால் சட்டம். 12 பெரிய நிறுவனங்கள் மீது, சட்ட ரீதியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையால், 2 லட்சம் கோடி ரூபாய் திரும்ப வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வளவும் திரும்பி வருமா?
வங்கிகளின் வாராக்கடன் பிரச்னை, பெரிய தலைவலி. பொதுத் துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் என்ன தான் லாபம் சம்பாதித்தாலும், ஏற்கனவே கொடுத்து, திரும்ப வராமல் போன தொகை, அவற்றின் ஒட்டுமொத்த வலிமையை சிதைக்கின்றன.பல வங்கிகள், வாராக்கடன்களை சீர்செய்ய, பல முயற்சிகளை மேற்கொண்டன. குறிப்பாக, கடனை திருப்பித் தர வேண்டிய காலத்தை, 20 – 25 ஆண்டுகள் வரை நீட்டித்துக் கொடுத்தன. புதிய கடன்கள் மூலம், பல நிறுவனங்களை இயங்க செய்து, அதன் மூலம் வருவாய் ஈட்டி, பழைய கடன்களை பைசல் செய்ய வாய்ப்பு அளித்தன. இவை எதுவுமே பயன் தரவில்லை.இந்நிலையில் தான், புதிய திவால் சட்டம் அமலுக்கு வந்தது. கூடவே, மத்திய அரசு, கடனை திரும்பச் செலுத்தாத நிறுவனங்கள் மீது, உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, மத்திய ரிசர்வ் வங்கிக்கு அனுமதியும் வழங்கியது. விளைவு, கடன்களை கட்டாத, 500 நிறுவனங்களை, ஆர்.பி.ஐ., ஆய்வுக்கு உட்படுத்தி, அதில், முதல், 12 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டது.சிக்கல்கள்இவர்கள் எல்லாரும், 5,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்கள். அதில், 60 சதவீதம் வரை, வாராக்கடன்களாக மாறிவிட்டவை. மிச்சமுள்ள, 488 நிறுவனங்களிடமிருந்து, அடுத்த ஆறு மாதங்களுக்குள் கடனை வசூல் செய்ய வேண்டும். திரும்பப் பெற முடியவில்லை என்றால், அவையும் திவால் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் தான், 12 நிறுவனங்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் இடம். வழக்கு பதிந்த, 14 நாட்களுக்குள், குறிப்பிட்ட நிறுவனத்தின் மீது, திவால் நடவடிக்கையை மேற்கொள்ள அனுமதி வழங்கும் முடிவை, தீர்ப்பாயம் எடுக்கும். அனுமதிக்கப்பட்டால், திவால் நடவடிக்கையை மேற்கொள்ளும் அலுவலரை, தீர்ப்பாயம் நியமித்து, 180 நாட்களுக்குள், அதற்கான திட்டத்தை வழங்கச் சொல்லும். தேவைப்பட்டால், கூடுதலாக, 90 நாட்களும் வழங்கப்படும். 270 நாட்களில், குறிப்பிட்ட நிறுவனங்களின் நிர்வாகக் குழு இயங்க முடியாது.இந்த கால கட்டத்திற்குள், பாதிக்கப்பட்ட நிறுவனத்தை வேறொருவரோ, வேறு குழுமமோ வாங்குவதற்கு ஏதுவான திட்டத்தை தயாரித்து வழங்க வேண்டும். 270 நாட்களுக்குள் திட்டம் ஏதும் உருவாகவில்லை என்றால், அந்நிறுவனத்தின் சொத்துகளை ஏலத்துக்கு கொண்டு வருவதை தவிர, வேறு வழியில்லை.அப்பாடா! சட்ட நடவடிக்கை என்ன என்பதை, ஒரு மாதிரி, 250 வார்த்தைகளுக்குள் சொல்லிவிட்டேன். பிரச்னைக்கு வருவோம். எங்களை மட்டும் ஏன் தனிமைப்படுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் நீதிமன்றங்களை அணுகின. ஆனால், அவை நிராகரிக்கப்பட்டன என்பது நல்ல செய்தி. அதே சமயம், வேறு சில முக்கியமான கேள்விகள் தான், திவால் நடைமுறையை சிக்கலாக்குகின்றன.முதல் விஷயம், பாதிக்கப்பட்ட நிறுவனங்களை யார் வாங்குவதற்கு முன்வருவர்? அவை, ஏற்கனவே நஷ்டமான நிறுவனங்கள். அதன் மீது இருக்கும் கடன்களோ எக்கச்சக்கம். வாங்குபவர்களுக்கு சாதகமாக, வங்கிகள் இந்த கடன்களில் ஒரு பகுதியையோ, வட்டியையோ தள்ளுபடி செய்து தர வேண்டும். இதை தான் ஆங்கிலத்தில், மிகவும் நாசூக்காக, ‘ஹேர்கட்’ என, குறிப்பிடுகின்றனர். இந்த முடி திருத்தத்துக்கு வங்கிகள் தயாரா? எவ்வளவு துாரம் தள்ளுபடி செய்ய முடியும்?தள்ளுபடி செய்யப்படும் தொகையை சமாளிக்க, இந்திய வங்கிகள், 18 ஆயிரம் கோடி ரூபாயையாவது ஒதுக்கி வைக்க வேண்டும் என, ஓர் ஆய்வு நிறுவனம் கணித்திருக்கிறது. இன்னொரு கணக்கும் சொல்லப்படுகிறது. ரூபாய்க்கு, 60 பைசா திரும்பி வந்தாலே போதும்; 40 பைசாவை விட்டுக் கொடுப்பதில் தவறில்லை என்று.விஜய் மல்லையா, மொத்த கடனில், 6,868 கோடி ரூபாயை கட்டுவதாக தெரிவித்த போது, இந்திய வங்கிகள் முறுக்கிக் கொண்டன. மொத்த தொகையையும் கட்டினால் தான், ஆச்சு என்று அடம்பிடித்தன. கடைசியில், ஒன்றுமே கட்டாமல், வெளிநாடு தப்பி ஓடியது தான் நிகர லாபம். ஆக, கிடைக்கும் வரை லாபம் என, வங்கிகள் நடந்து கொள்ள வேண்டும் என்பது, சமீபத்திய சிந்தனை.இன்னொரு தகவலோடு இணைத்து பார்த்தால் தான், இதன் அர்த்தம் இன்னும் தெளிவாக தெரியும். உலக நாடுகள் பலவற்றிலும், திவால் சட்டம் உண்டு. திவால் நடவடிக்கை நிறைவு பெற்று, தீர்வு காண எவ்வளவு காலமாகும் என்பதை பற்றிய கணிப்பை, உலக வங்கி வெளியிட்டு உள்ளது. அதன்படி, சிங்கப்பூரில், 10 மாதங்களில் நடவடிக்கைகள் நிறைவு பெற, பிரிட்டனிலோ, ஓராண்டு ஆகிறது. சீனாவில், இரு ஆண்டுகள் ஆக, இந்தியாவிலோ, 4.3 ஆண்டுகள் ஆகின்றன! மேலும், இதுவரை, ரூபாய்க்கு, 25.7 பைசா தான் திரும்ப வந்திருக்கிறது. இதனோடு ஒப்பிடும் போது, 60 பைசா பெரிய தொகை தானே? என, வாதம் வைக்கப்படுகிறது.இன்னொரு பெரிய பிரச்னை, நிறுவனங்களின் மதிப்பை கணக்கிடுவது. அதற்கு நிர்வாகக் குழுவினரும், உள்ளே இருக்கும் பணியாளர்களும், திவால் குழுவினருக்கு உதவ வேண்டும். இது, இணக்கமாக நடைபெறும் என்பதற்கு உத்தரவாதமில்லை. இதனால், நிறுவனத்தின் மதிப்பை கணக்கிடுவதில் குழப்பம் ஏற்படலாம்.எச்சரிக்கைமேலும், திவால் குழுவினர், முற்றிலும் வெளியிலிருந்து வரும் துறை சார்ந்த வல்லுனர்கள். அவர்களால், வங்கிகளும், நிறுவனங்களும் ஏற்கும் ஒரு சமரச திட்டத்தை வகுத்துத் தர முடியுமா என்பது, இன்னும் கேள்வியாகவே இருக்கிறது.பெரிய நிறுவனங்கள் இப்படிப்பட்ட பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்க, சிறு மற்றும் குறுந்தொழில்களும் வங்கிக் கடன்களை கட்டாமல், திவால் நடவடிக்கைக்கு உள்ளாகி வருகின்றன. அது, அடுத்தொரு பெரிய கதையாக தொடரப் போகிறது. வங்கிகளை பொறுத்தவரை, கொடுத்த கடன்களை முடிந்த வரை மீட்க வேண்டும் என, முயற்சி செய்கின்றன. இதிலிருந்து திரும்ப வரக்கூடிய தொகை மிகவும் குறைவாக இருந்தால், ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், வங்கிக் கடனை திரும்பச் செலுத்தாவிட்டால், நடவடிக்கையே இராது, தப்பித்துவிடலாம் என, நம்பும் நிறுவனங்களுக்கு, இத்தகைய முயற்சிகள் ஒரு எச்சரிக்கை மணியாகவே இருக்கும்.ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்