‘இலவச ஆர்ஜியோ போன் புத்திசாலித்தனமான வர்த்தகம்’
புதுடில்லி : ‘‘ரிலையன்ஸ் இன்போகாம் நிறுவனம், பூஜ்ஜிய விலையில், ‘ஆர்ஜியோ போன்’ விற்பனை திட்டம் மூலம், புத்திசாலித்தனமான சந்தைப்படுத்தும் நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது,’’ என, மொபைல் போன் சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பின், தலைமை இயக்குனர் ராஜன் மேத்யூஸ் தெரிவித்து உள்ளார்.ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, நேற்று முன்தினம், பூஜ்ஜிய விலையில், ஆர்ஜியோ போன் வழங்கப்படும் என, அறிவித்தார். ‘இதற்காக செலுத்தும், 1,500 ரூபாய் முன்பணத்தை, மூன்று ஆண்டுகளுக்கு பின், போனை திரும்ப ஒப்படைத்து பெற்றுக் கொள்ளலாம்; மாதம், 153 ரூபாய் கட்டணத்தில், இலவச அழைப்புகள் மற்றும் தகவல் பரிமாற்ற வசதிகளை, இந்த போனில் பெறலாம்’ என, அவர் கூறினார்.இந்த திட்டம் குறித்து, ராஜன் மேத்யூஸ் கூறியதாவது:மொபைல் போன் உடன், தொலை தொடர்பு சேவையும் இலவசமாக வழங்கும் திட்டம், மிகவும் புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்ட சந்தைப்படுத்தும் முறையாகும். இதன் மூலம், ஆர்ஜியோவுக்கு, உரிம கட்டணம் மற்றும் இதர வரிச் செலவுகள் மிச்சமாகும்.இதற்கு முன், மொபைல் போன் உடன், தொலை தொடர்பு சேவை வழங்கும் போது, நிறுவனங்கள் செலுத்திய, 14 அல்லது 11 சதவீத உரிம கட்டணம், மொபைல் போன் விலையில் சுமத்தப்படும்.ஆனால், ஆர்ஜியோ, புத்திசாலித்தனமாக, மொபைல் போன் பூஜ்ஜிய விலையில் வழங்கப்படும் என, அறிவித்துள்ளது. அதனால், அதற்கு உரிம கட்டணம், அகண்ட அலைவரிசை பயன்பாட்டு கட்டணம் ஆகியவற்றை செலுத்த தேவையில்லை.இத்திட்டம், ஆர்ஜியோவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும். அதே சமயம், போட்டி நிறுவனங்கள், மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தலைவலியை கொடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.