கடனால் சொத்தை விற்கிறது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
புதுடில்லி : அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், 45 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி உள்ளது. இதையடுத்து, டில்லி மற்றும் மும்பையில் உள்ள, ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்பனை செய்வதில், இந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இது தவிர, தொலை தொடர்பு கோபுர வர்த்தகப் பிரிவை, கனடாவின் புரூக்பீல்டு இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்திற்கு, விற்பனை செய்து, 11 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம், பெரும்பான்மை வங்கிக் கடனை, வரும் செப்டம்பருக்குள் திரும்பத் தர, ஆர்காம் திட்டமிட்டு உள்ளது. சொத்து விற்பனை தொடர்பான நடவடிக்கைகள் துவங்கி நடைபெற்று வருவதாக, ஆர்காம் தெரிவித்து உள்ளது.
அனில் அம்பானியின் சகோதரர், முகேஷ் அம்பானியின் ஆர்ஜியோ நிறுவனம், 2016 செப்டம்பரில், மொபைல் போன் சேவையை துவக்கி, இலவச அழைப்புகள் மூலம், தொலை தொடர்பு துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, ஆர்காம், ஏர்டெல் உள்ளிட்ட அனைத்து மொபைல் போன் சேவை நிறுவனங்களும், கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் இழப்பை சந்தித்துள்ளன.