சவால்களை மீறி வருவாய் டெக் மகிந்திரா சாதனை
புதுடில்லி : தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணியில் உள்ள, டெக் மகிந்திரா, மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 558 கோடி ரூபாயை, ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 854.80 கோடி ரூபாயாக உயர்ந்திருந்தது.கடந்த முழு நிதியாண்டில், டெக் மகிந்திராவின் நிகர லாபம், 2,812.90 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டில், 2,992.90 கோடி ரூபாயாக அதிகரித்து இருந்தது. இதே கால ஒப்பீட்டில், இந்நிறுவனத்தின் வருவாய், 9.9 சதவீதம் உயர்ந்து, 26,494.20 கோடி ரூபாயில் இருந்து, 29,140.80 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது குறித்து, டெக் மகிந்திராவின் துணை தலைவர், வினீத் நய்யார் கூறியதாவது:அமெரிக்க அதிபர், டிரம்பின் அறிவிப்புகளுக்கு பின், தகவல் தொடர்பு துறை உயிர் பிழைக்குமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. உண்மை தான்; அவருடைய அறிவிப்புகள், பல சவால்களை எங்கள் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது. ஆனால், இது அமெரிக்காவிலிருந்து மட்டுமல்ல; உலகெங்கிலும் இருந்து இத்தகைய தடைகள் அதிகரித்து வருகின்றன.சில வெளிப்படையாகவும், சில மறைமுகமாகவும் உள்நாட்டில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க உருவாக்கப்படுகின்றன. ஆனால், நாங்கள் உயிரோடு இருக்கிறோம்; தடைகளை தகர்த்து எறியவும் செய்திருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.