ரியல் எஸ்டேட் துறையில் எழுச்சிக்கான அறிகுறிகள்
புதுடில்லி : நைட் பிராங்க் இந்தியா – ‘பிக்கி’ அமைப்பு இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: கடந்த ஆண்டு நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ரியல் எஸ்டேட் துறையை கலங்கடித்து விட்டது.
அப்போது, ரியல் எஸ்டேட் துறையினர், கட்டுமான துறையினர், வங்கி மற்றும் நிதி நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட, 2016 அக்., – டிசம்பர் வரையிலான, ரியல் எஸ்டேட் நிலவரக் குறியீடு, 41 புள்ளிகளாக, மூன்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவடைந்தது.
இந்தாண்டு துவக்கத்தில் இருந்து, பணப்புழக்கம் மெல்ல சீரடைந்து இயல்பு நிலை துவங்கியதை அடுத்து, ரியல் எஸ்டேட் நிலவரக் குறியீடு, தற்போது, 53 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. எனினும், ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்டம், பினாமி சொத்து தடுப்பு சட்டம், சரக்கு மற்றும் சேவை வரி போன்ற, அரசு கொள்கைகளின் தாக்கத்தை அறிய, ஆறு மாதங்கள் ஆகும் என, தெரிகிறது. அதுவரை பொறுத்திருக்கலாம் என, ரியல் எஸ்டேட் துறையினர் கருதுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.