எப்.ஐ.பி.பி., அமைப்பு கலைப்பு; சி.ஐ.ஐ., கூட்டமைப்பு வரவேற்பு
புதுடில்லி : எப்.ஐ.பி.பி., எனப்படும், அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தை கலைக்க, மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதை வரவேற்று, சி.ஐ.ஐ., எனப்படும், தேசிய தொழிலக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: எப்.ஐ.பி.பி., அமைப்பு, இந்தியாவில், அரசு அனுமதி உடன் அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளும் திட்டங்களுக்கு அனுமதி வழங்கி வந்தது. தற்போது, பெரும்பான்மையான துறைகளில், அரசு ஒப்புதல் இன்றி, அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்படுகிறது. பாதுகாப்பு, சில்லரை விற்பனை உள்ளிட்ட, 11 துறைகளுக்கு மட்டுமே, அரசு ஒப்புதல் தேவைப்படுகிறது.
அதனால், எப்.ஐ.பி.பி., அமைப்பு தேவையில்லை. அதை கலைக்கும் மத்திய அரசின் துணிச்சலான நடவடிக்கை பாராட்டத்தக்கது. இதன் மூலம், அதிகளவில் அன்னிய நேரடி முதலீடு குவியும். இந்தியாவில் தொழில் துவங்குவதை மேலும் சுலபமாக்க, இந்த நடவடிக்கை துணை புரியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.