கட்டிடத்தில் பெரும் தீ! - தீயணைப்புப்படை வீரர்கள் ஏழுமணி நேர போராட்டம்!!
சிறிய உணவகம் ஒன்றில் பற்றிக்கொண்ட தீ, பெரும் போராட்டங்களுக்கு பின்னர் 7 மணிநேரங்கள் கழித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
Faubourg Saint Denis இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் தரைத் தளத்தில் உள்ள சிறிய உணவகம் ஒன்றிலேயே தீப்பற்றியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு உணவகத்தின் சமையலறையில் பற்றிக்கொண்ட தீ பெரியளவில் பரவியுள்ளது. சிறிது சிறிதாக தீ பரவி, மேல் தளங்களுக்கும் பரவியுள்ளது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடினார்கள். தொடர்ச்சியான ஏழுமணி நேர போராட்டத்துக்கு பின்னர் காலை 4.30 மணிக்கு தீ கட்டுப்படுத்தப்பட்டது.
தரை தளத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பற்றிக்கொண்ட தீ, 6 வது தளம் வரை பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அடுத்தடுத்த மதில்களுக்கு பரவாமல் தீயணைப்பு படை வீரர்கள் திறமையாக செயற்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் போது பலர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். உயிரிழப்புக்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.