'தலைவா நீ ஈழம் செல்... எம் மக்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள்!'

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தலைவா நீ ஈழம் செல்... எம் மக்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள்!

தலைவருக்கு ஒரு வேண்டுகோள்.

தலைவாநீ ஈழம் செல்.

உன் வருகைக்காக எம் தமிழினம் அங்கே ஏக்கத்தோடு காத்திருக்கிறது.இலங்கை அரசு தரும் உனக்கான மரியாதையால் நம் மீனவனுக்கும் நல்லகாலம் பிறக்கலாம்.

வாய்ப்புகள் அமையாது நாம்தான் அமைத்துக்கொள்ளவேண்டும் என்று சொன்னவர் தாங்கள்தானே?

ஈழத்தைக் காண இனியொரு வாய்ப்பு வருமோ வராதோ!

வந்த வாய்ப்பு எவர் தந்திருந்தால் என்ன? பயன்பெறுபவர் நம் தமிழினம்தானே?நீங்கள் செல்லவில்லை என்றால், நீங்கள் அன்று விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதால் சிங்களனுக்குப் பயந்து செல்லவில்லை என ஒரு கும்பல் கிளம்பத்தான் போகிறது.

உங்கள் ஈழத்துப் பயணம் ஜப்பானிலும் பேசப்படும்... கவனிக்கப்படும்! அவர்களின் ஆதரவும் அந்த மக்களுக்குக் கிடைக்கக் கூடும்.

ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டுகிறேன் உங்களை ஈழம் செல்லக்கூடாது எனத் தடுப்பவர்கள் யார் யார்?

அவர்களுக்கு மக்கள் இங்கே தேர்தல்களில் அளிக்கும் வாக்கு என்ன? வரிசை என்ன? மரியாதை என்ன என்பதைக் கவனித்தால் பூஜ்யம் என்ற விடைதான் கிடைக்கும்.

தமிழக மக்களால் முற்றிலும் புறக்கணிக்கப்படும் இந்த இயக்கங்களும், அதன் தலைவர்களும் சொல்வதைத் தாங்கள் மட்டும் ஏன் சட்டைசெய்யவேண்டும்?தமிழகமே எட்டி உதைக்கும் இவர்களின் வார்த்தைகளை எட்டி மிதித்துவிட்டு, தாங்கள் ஈழம் நோக்கி முதல் அடியை எடுத்துவையுங்கள்.

அந்தச் செய்தி எட்டுத்திக்கும் பரவட்டும். உங்களை எதிர்ப்பவர்களுக்கும் உங்கள் புகழின் உச்சம் எத்தகையது, அதன் எல்லை எத்தனை நாடுகள் கடந்து பரந்து விரிந்துள்ளது என்பது நன்றாகவே தெரியும்.

உங்களின் வானுயர்ந்தப் புகழ் எம்மக்களுக்கு, மன்னிக்கவும், உங்கள் மக்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்மை தரும், பல நாடுகளின் கவனத்தை அவர்களை நோக்கி ஈர்க்குமென்றால், அந்தப் புகழை நீங்கள் பயன்படுத்த எவன் உத்தரவுக்கும் செவிசாய்க்கத் தேவையே இல்லை.

இவர்களின் வெட்டிக் கூச்சல் இங்கிருப்பவனுக்கே சோறுபோடாது, ஈழத்திற்கா விடிவைத் தேடித்தரப் போகிறது?

நீங்க கிளம்புங்க... உங்க எண்ணப்படி செய்ங்க. மக்கள் ஆதரவு கண்டிப்பாக உண்டு .மக்கள் வேறு மடையர்கள் வேறு என்பதை உணர்ந்த தாங்கள் நிச்சயமாக இலங்கை செல்லவேண்டும்.

இப்படிக்கு உங்கள் ரசிகனல்ல மாணவன்.

- கார்த்திகேயன் எம்கே

#தலைவா_ஈழம்_செல்_எதிர்ப்புகளை_வெல்

மூலக்கதை