லண்டன் தாக்குதல்: மயிரிழையில் தப்பிய மலையாள நடிகர்..!

தினமலர்  தினமலர்
லண்டன் தாக்குதல்: மயிரிழையில் தப்பிய மலையாள நடிகர்..!

லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பாலம் மற்றும் பார்லிமென்ட் அவைகளுக்கு வெளியே நேற்று முன்தினம் ஐ.எஸ்.ஐ., என்கிற அமைப்பு நடத்திய தாக்குதல் உலகெங்கும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான்கு பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் இருந்து மலையாள நடிகர் அனூப் மேனன் என்பவர் அதிர்ஷ்டவசமாக தப்பிய விபரம் இப்போது வெளியாகி உள்ளது.

மலையாள திரையுலகில் பிரபல நடிகர் தான் அனூப் மேனன். ஹீரோவாக மட்டுமல்லாமல், குணச்சித்திர வேடங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவர் ஒரு கதாசிரியரும் கூட. கடந்த வருடத்தில் பிருத்விராஜின் 'பாவாட', மோகன்லாலுடன் 'கனல்' மற்றும் இந்த வருடம் வெளியான 'முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' ஆகிய முக்கிய படங்களில் நடித்துள்ளார் அனூப் மேனன்.

இவர் லண்டனுக்கு சில நாட்களுக்கு முன்புதான் சுற்றுலா கிளம்பி சென்றாராம். புதன்கிழமை அன்று சம்பவம் நடப்பதற்கு கால்மணி நேரம் முன்பு தான் வெஸ்ட்மினிஸ்டர் பாலம் பகுதியை சுற்றிப்பார்த்துவிட்டு சென்றாராம். அந்தப்பகுதியை விட்டு நான்கைந்து கி.மீ கூட போயிருக்காத நிலையில் தான், திடீரென போலீஸ் வாகனங்களும், தீயணைப்பு வாகனங்களும் எதிர் திசையில் வெஸ்ட்மினிஸ்டர் பாலம் நோக்கி விரைவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்தவர்களிடம் விசாரிக்க, அப்போதுதான் இந்த தாக்குதல் சம்பவம் தெரியவந்ததாம். தான் மயிரிழையில் தப்பியதை நினைத்து அவருக்கு அதிர்ச்சி விலகவே சில நிமிடங்கள் பிடித்ததாம்.

மூலக்கதை