சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

கடந்த ஆண்டின் இறுதியும் இந்த ஆண்டின் தொடக்கமும் திரிஷாவுக்கு சோதனை காலமாக அமைந்திருக்கிறது. பட அதிபர் வருண் மணியனுடன் நடந்த திருமண நிச்சயதார்த்தத்தை முறித்துக்கொண்டு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் திரிஷா.

இந்நிலையில் கடந்த ஆண்டின் இறுதியில் ஜல்லிக்கட்டு விவகாரம் தலைதூக்கியது. பீட்டா அமைப்புக்கு ஆதரவாக திரிஷா இருப்பதாக கூறி அவரை இணைய தளங்களில் காய்ச்சி எடுத்தனர்.

அத்துடன் அவர் படப்பிடிப்பில் இருந்தபோது நேரடியாக சென்ற சில இளைஞர்கள் திரிஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி படப்பிடிப்பை முடக்கினர். தான் பீட்டா உறுப்பினர் கிடையாது, ஜல்லிக்கட்டு எனக்கு பிடிக்கும் என்று சமாதானம் கூறி ஒருவழியாக பிரச்னையிலிருந்து மீண்டு வந்தார்.

இந்த சம்பவங்களினால் இணைய தள டுவிட்டர் பக்கத்திலிருந்தும் வெளியேறி, பிரச்னை முடிவுக்கு வந்தபிறகு மீண்டும் அதில் இணைந்தார். சமீபத்தில் பாடகி சுசித்ரா வடிவில் மறுபடியும் திரிஷாவுக்கு கெட்ட காலம் தொடங்கியது.

நடிகர்களுடன் நெருக்கமாக இருப்பதுபோன்று திரிஷாவின் ஆபாச படம் வெளியிடப்பட்டது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தவர், சுசித்ரா மீது பாய்ந்தார்.



பிரச்னை ஓரளவுக்கு ஓய்ந்திருக்கும் நிலையில் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். இந்நிலையில் 2 தினங்களுக்கு முன், உணவினால் ஏற்பட்ட ஒவ்வாமை (ஃபுட் பாய்சன்) காரணமாக திரிஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக இணைய தளங்களில் வேகமாக தகவல் பரவியது.

இதுபற்றி அவரை பலர் தொடர்பு கொண்டு விசாரித்தனர். இதுகுறித்து திரிஷாவின் தாயார் உமாகிருஷ்ணன் கூறும்போது,’மலேசியாவில் சதுரங்க வேட்டை 2 படத்தின் படப்பிடிப்பில் அரவிந்த்சாமியுடன் திரிஷா நடித்து வருகிறார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வரும் தகவல் வெறும் வதந்திதான் யாரும் நம்ப வேண்டாம்’ என தெரிவித்திருக்கிறார்.

அடுத்தடுத்து தாக்குதல்களை சந்தித்து வருவதால் சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்ற நிலைக்கு ஆளாகியிருக்கிறார் திரிஷா.

.

மூலக்கதை