இருபது-20 போட்டியில் தனியொருவராக 300 ஓட்டங்கள் குவித்த வீரர்!
இந்தியாவின் முதற்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவரும் டெல்லி வீரரான மோஹித் ஆலாவத், இருபது-20 போட்டியொன்றில் தனியொருவராக 300 ஓட்டங்களை விளாசி சாதனை படைத்துள்ளார்.
டெல்லி, லலிதா பார்க்கில் நேற்று (7) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில், 21 வயதே நிரம்பிய மோஹித் 72 பந்துகளில் 300 ஓட்டங்களைப் பெற்றார். இதில் 14 நான்கு ஓட்டங்களும் 39 ஆறு ஓட்டங்களும் அடங்கும்.
இந்த அபார ஆட்டத்தால், இ-20 போட்டியொன்றில் மூன்று சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையையும் மோஹித் பெற்றுள்ளார்.
விக்கெட் காப்பாளரான மோஹித்தின் பங்களிப்புடன் அவரது அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 416 ஓட்டங்களைக் குவித்தது. இந்தப் போட்டியில் எதிரணியினர் 200 ஓட்டங்களுக்குச் சுருண்டனர்.
முதற்தரப் போட்டிகளைப் பொறுத்தவரையில், ஐபிஎல் போட்டியொன்றில் கிறிஸ் கெய்ல் விளாசிய 175 ஓட்டங்களே தனியொரு வீரரின் அதியுச்ச ஓட்டங்களாகப் பதிவாகியுள்ளது.