சிறிலங்காவை சேர்ந்த ஆறு பேருக்கு வெளிநாட்டில் மரண தண்டனை!
சிறிலங்காவை சேர்ந்த ஆறு பேருக்கு குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குவைத்திற்கான சிறிலங்கா தூதுவர் நந்தீபன் பாலசுப்பிரமணியம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆறு பேரும் போதைப்பொருள் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்கள், கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் நஷ்டஈட்டைப் பெற்றுக்கொள்ள சம்மதித்தால் மரண தண்டனையிலிருந்து விடுபட முடியும்.
ஆனால் போதைப்பொருள் குற்றச்சாட்டின்பேரில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வாறு மரண தண்டனையிலிருந்து விலக்களிக்க முடியாது என்றும் நந்தீபன் பாலசுப்பிரமணியம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு முன்னர் சிறிலங்காவைச் சேர்ந்த ஒருவர் கொலைக்குற்றத்திற்காக தரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டார் என்று குறிப்பிட்டுள்ள அவர், சிறிலங்கா தூதரகத்தின் உதவியுடன் நட்ட ஈட்டை வழங்கி தண்டனையிலிருந்து விடுபட்டார் என அவர் கூறினார்.
எவ்வாறாயினும் குவைத் அரசாங்கம் 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரை தற்காலிகமாக தரணதண்டனையை நிறுத்திவைத்திருந்தது. ஆனால் இந்த வருடம் தொடக்கம் மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்றி வருகின்றது.
அந்த வகையில் இந்த வருடத்தில் குவைத் அரச குடும்பத்தினர் உட்பட ஏழுபேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்றும் குவைத்திற்கான சிறிலங்கா தூதுவர் நந்தீபன் பாலசுப்பிரமணியம் சுட்டிக்காட்டியுள்ளார்.