மின்னணு சாதனங்கள் இறக்குமதி 26 சதவீதம் அதிகரிப்பு
புதுடில்லி : இந்தாண்டு ஜனவரியில், மின்னணு சாதனங்கள் இறக்குமதி, 26 சதவீதம் அதிகரித்து, 26,758 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது; ஏற்றுமதி, 10 சதவீதம் குறைந்து, 3,163 கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், முறையே, 21,220 கோடி ரூபாய் மற்றும் 3,526 கோடி ரூபாயாக இருந்தது. இது குறித்து, இந்திய மின்னணு தொழில்கள் கூட்டமைப்பின் செகரட்டரி ஜெனரல் ராஜூ கோயல் கூறியதாவது:மின்னணு துறையில், மொபைல் போன், தொலை தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், அவற்றில் அடங்கியுள்ள பெரும்பான்மையான உபகரணங்கள், இறக்குமதியை சார்ந்து இருக்கின்றன. இதன் காரணமாகவே, மின்னணு சாதனங்கள் இறக்குமதி அதிகரித்துள்ளது.மத்திய அரசு, மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிப்பதால், வணிகர்கள் பயன்படுத்தும், ‘பாயின்ட் ஆப் சேல்’ சாதனங்கள், விரல் ரேகை பதிவு கருவிகள் உள்ளிட்டவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதனால், இவ்வகை சாதனங்களின் இறக்குமதி உயர்ந்துள்ளது. இறக்குமதியை குறைக்க, உள்நாட்டு உற்பத்திக்கு மேலும் ஊக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.கடந்த 2015 – 16ம் நிதியாண்டில், 54 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இது, நடப்பு நிதியாண்டில், 90 ஆயிரம் கோடி ரூபாய் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், 2019ல், உள்நாட்டில், 50 கோடி மொபைல் போன்களை தயாரிக்க, இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், 2019 – 20ம் நிதியாண்டில், 12 கோடி மொபைல் போன்களை ஏற்றுமதி செய்யவும், உற்பத்தி மதிப்பை, 1.5 – 3 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தவும் திட்டமிட்டு உள்ளது.