ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்திலும் அணிதிரளும் தமிழர்கள்!
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழகத்தில் போராடுபவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்கக்கோரி தமிழகம் எங்கும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் தமிழகம் எங்கும் மாணவர்கள், இளைஞர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழக இளைஞர்களுக்கு ஆதரவாக நாங்களும் இருக்கிறோம் என்று கூறி யாழ் இளைஞர்கள் தன்னெழுச்சியான போராட்டம் ஒன்றிற்கு சமூக வலைத்தளங்களினூடாக அழைப்பு விடுத்துள்ளனர்.
''தமிழ் மரபினை காக்கப் போராடும் தமிழக உறவுகளுக்காக யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் கவனயீர்ப்பு'' என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை நான்கு மணிக்கு யாழ். நல்லூரில் அனைவரையும் ஒன்று கூடுமாறு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தன்னெழுச்சியாக கூடியிருக்கும் இவ்வேளையில், ஈழத்தமிழர்களின் சார்பில் பூரண ஆதரவை வெளிப்படுத்துவதற்காக அனைவரும் ஒன்று திரண்டு நல்லூருக்கு வாருங்கள் என இளைஞர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.