இலங்கை பிரஜையை நாடு கடத்த தயாராகும் கனடா!
தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை கனடா நாடு கடத்தக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக கொழும்பின் பிரபல ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
விடுதலை புலி இயக்கத்தை சேர்ந்த உறுப்பினரும், புகலிடக் கோரிக்கையாளரான மாணிக்கவாசகம் சுரேஸ் என்பவர் கனேடிய நீதிமன்றில் மேன்முறையீடு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மேன்முறையீடு கனேடிய நீதிமன்றில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரண்டு தசாப்த காலமாக தம்மை நாடு கடத்தக் கூடாது எனக் கோரி சுரேஸ் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை கனேடிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மாணிக்கவாசகம் சுரேஸ், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் மற்றும் யுத்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் புகலிடக் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மாணிக்கவாசகம் சுரேஸ் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்தார் என் குடிவரவு மற்றும் அகதிகள் சபையினால் "போதுமான ஆதாரம் " கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நீதவான் ரிச்சர்ட் மோஸ்லி தனது தீர்ப்பில் எழுதியுள்ளார்.
தன்னார்வ அடிப்படையில் விடுதலை புலிகளின் சார்பில் சுரேஸ் கடயைமாற்றியதாகவும் நிதி திரட்டியதாகவும் நீதவான் ரிச்சர்ட் மோஸ்லி குற்றம் சுமத்தியுள்ளார்.
1995ம் ஆண்டு சுரேஸை கனேடிய அதிகாரிகள் கைது செய்திருந்தனர். 2015ம் ஆண்டில் சுரேஸை நாடு கடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது, இந்த தீர்ப்பிற்கு எதிராக மீளவும் சுரேஸ் மேன்முறையீடு செய்திருந்தார்.
தற்போது கனடிய அதிகாரிகள் பாதுகாப்பு சான்றிதழின் கீழ் அவரை நாடு கடத்துவதற்கு முயல்வதாக பெடரல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக குறித்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.