சாந்துப் பொட்டு – சந்தனப் பொட்டு: ‘வாத்தியார்’ பாணியில் சிலம்பம் சுழற்றிய கனடா பிரதமர்
உலக தமிழர்களுக்கு தமிழில் தைப்பொங்கல் வாழ்த்து கூறி அசத்திய கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோ தமிழர்களுடன் சேர்ந்து சிலம்பம் சுற்றும் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முழுவதையும் தமிழர்கள் கலாச்சார மாதமாக கடந்த ஆண்டு பாராளுமன்றத்தின் மூலம் அறிவித்த கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டுருடோ நேற்று தனது வீடியோ செய்தியில் அந்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட வீடியோ செய்தியில், ‘வணக்கம். கனடாவாழ் தமிழர்களும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் தங்கள் அன்புக்குரியவர்களுடன் சேர்ந்து தைப்பொங்கலை கொண்டாடுகின்றனர்.
இந்த பொங்கல் விசேஷ அர்த்தமும், பாரம்பரியமும் கொண்டது. இப்பண்டிகை, அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்தது. கனடாவாழ் தமிழர்கள் இந்த நாட்டை வலிமையான, வளமான நாடாக ஆக்கியவர்கள். அவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள்’ என்று அவர் வாழ்த்தி இருந்தார்.
சுத்தமான தமிழில் ‘வணக்கம்!’ என்று தனது உரையை தொடங்கிய அவர், ‘இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்’ என்று தமிழில் முடித்தார்.
அவரது இந்த பெருந்தன்மை கனடாவில் வாழும் தமிழர்களை மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் தமிழ் மக்களையும் நெகிழ வைத்துள்ள இவ்வேளையில், கடந்த 2015-ம் ஆண்டு கனடா நாட்டு தமிழர்கள் நடத்திய ஒரு பாரம்பரிய விழாவில் பங்கேற்ற பிரதமர் ஜஸ்டின் டுரூடோ, நமது தமிழ் சகோதரர்களுடன் சேர்ந்து சிலம்பம் விளையாடிய புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.