புதிய அரசியலமைப்பில் மலையக தமிழர்களுக்கும் உரிய இடம் பெற்றுக்கொடுப்போம் என்கிறார் அமைச்சர் மனோ
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் மலையக தமிழ் மக்களுக்கு உரிய இடம்பெற்றுக் கொடுக்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் தேசிய மொழிகள் சமூக மேம்பாட்டு சகவாழ்வு கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், 2016 ஆம் ஆண்டில் வடக்கில் இடம்பெற்ற தைப்பொங்கல் விழா இந்த ஆண்டு மலையகத்தில் இடம்பெறுவது போல, அடுத்த ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற வடக்கு, கிழக்கு, மலையக மக்கள் வாக்களித்ததன் பயனை இன்று அனுபவிக்கக் கூடியதாக இருக்கின்றது. அவரின் வெற்றியில் மலையகத்துக்கு பாரிய பங்களிப்பும் இருக்கின்றது. அதற்குரிய அந்தஸ்து தரப்பட்டு இன்று தேசிய பொங்கல் விழா மலையகத்தில் நடைபெற்றுள்ளது.
மலையக மக்களை ஒரு காலத்தில் யாரும் கண்டு கொள்ளவில்லை. இவர்கள் புறக்கணிக்கப்பட்டவர் களாகவே இருந்து வந்தார்கள். இன்று அந்த நிலைமை இல்லை. அமைச்சர் திகா, நான், அமைச்சர் ராதா ஊடாக உரிய இடம் வழங்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மலையகம் கிள்ளு கீரை என்று யாரும் எண்ணிவிடக் கூடாது. மலையக மக்களை யாரும் ஒதுக்கி வைக்கவும் முடியாது. அவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார்கள். இன்று தமிழ் முற்போக்கு கூட்டணி நாகரிகமாகவும் நவீனமாகவும் அதன் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் அமைச்சர் திகாம்பரம் இந்த ஆண்டில் 10 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றார். அந்த வீடுகளுக்கு அமைச்சரவைப்பத்திரத்தின் மூலம் உறுதிகளும் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன. மேலும் மலையக பெருந்தோட்டங்களில் இரண்டு மூன்று ஏக்கர் காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளித்து அவர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக ஆக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
மலையக இனம் தேசிய இனமாக ஐக்கியப்பட்டு வருகின்றது. ஐக்கியம் என்று சொல்லும் போது அடிமைத்தனம் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. ஏனைய இனங்களுக்கு இணையாக செயற்பட்டு வருகின்றோம் எனபதை உணர்ந்து கொள்ள வேண்டும். நாட்டில் புதிய அரசிய யலமைப்பு உருவாக்கம் இடம்பெற்று வருகின்றது. இந்த நேரத்தில் மலையக மக்களுக்கு உரிய இடத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகும். அந்தக் குழுவில் நானும் இருப்பதால் மலையக தமிழ் மக்களுக்கு உரிய இடத்தைபெறுக் கொடுப்பேன்.
எமது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சியால் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைத்துள்ளது.அதன் ஊடாக மலையக இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அம்பாந்தோட்டை, வெல்லவாய, போந்தார பகுதிகளில் உள்ளது போல மலையகத்திலும் கைத்தொழில் பேட்டிகளை அமைத்துக் கொடுக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.