முன்னாள் மேயர் சிவகீதா உட்பட நால்வர் பிணையில் விடுதலை
-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்
பாலியல் தொழில் சம்பந்தமான குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட 04 பேரும் நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நீதவான்; நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில்; இன்று இச்சந்தேக நபர்களை ஆஜர்படுத்தியபோது, தலா 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான 02 சரீரப்பிணைகளிலும் அவர்களை நீதவான் விடுவித்துள்ளார்.
மேலும், பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இவர்கள் கையொப்பம் இடவேண்டும் என்பதுடன், எதிர்வரும் 05ம் திகதி நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராக வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டார்.
திருகோணமலை -மட்டக்களப்புப் பிரதான வீதியிலுள்ள முன்னாள் மேயரின் வீட்டுடன் இணைந்த கட்டட அறைகள் வெளியார் தங்குவதற்காக வாடகைக்கு விடப்படுகின்றன. அக்கட்டடத்தில் பாலியல் தொழில் இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலை அடுத்து, கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி பொலிஸார் சோதனை மேற்கொண்டு, முன்னாள் மேயரும் அவரது கணவரும் உட்பட 09 பேரைக்; கைதுசெய்திருந்தனர். இதனை அடுத்து, இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், முன்னாள் மேயரின் கணவர் உட்பட 05 பேர் பொலிஸ் பிணையில் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.