ரம்பா தொடர்ந்த வழக்கு ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைப்பு

PARIS TAMIL  PARIS TAMIL
ரம்பா தொடர்ந்த வழக்கு ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைப்பு

 நடிகர் பிரபு நடித்த ‘உழவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரம்பா என்ற விஜயலட்சுமி (வயது 39). இவருக்கும், இலங்கை தமிழரான இந்திரகுமார் (வயது 47) என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

 
திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்தனர். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ரம்பாவுக்கும், அவரது கணவர் இந்திரகுமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ரம்பா சென்னைக்கு வந்துவிட்டார்.
 
இதையடுத்து சென்னை குடும்பநல கோர்ட்டில் நடிகை ரம்பா ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், ‘தன் கணவரை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார். மேலும், ‘தற்போது சினிமாவில் நடிக்காததால் தனக்கு வருமானம் எதுவும் இல்லை. அதனால், மாதந்தோறும் தனக்கு ரூ.1.50 லட்சமும், தனது இரு மகள்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம், ரூ.1 லட்சமும், ஆக ரூ.2.50 லட்சம் ஜீவனாம்சம் வழங்க தன் கணவர் இந்திரகுமாருக்கு உத்தரவிடவேண்டும்’ என்றும் கூறியிருந்தார்.
 
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி சிவதாணு, விசாரணையை டிசம்பர் 3-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சிவதாணு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது ரம்பா மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். அதில், என்னுடைய கணவர் என்னுடன் தற்போது சேர்ந்து வாழவில்லை. குழந்தைகள் இருவரும் என்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் தான் உள்ளனர். அவர்கள் சென்னையில் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கின்றனர். எனவே, இந்த இரு குழந்தைகளின் சட்டப் படியான பாதுகாவலராக என்னை (ரம்பாவை) அறிவிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
 
இந்த வழக்கு விசாரணையின்போது, ரம்பாவும், அவரது கணவரும், குழந்தைகளும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர்களது சார்பில் அவர்களுடைய வக்கீல்கள் ஆஜரானார்கள். ரம்பாவால் கோர்ட்டுக்கு வரமுடியவில்லை என்றும், அதனால் வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் ரம்பா தரப்பு வக்கீல் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி 21-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். 
 

மூலக்கதை