குருநாதர் கே.பாக்யராஜ்க்கு பார்த்திபனின் சாதனை சல்யூட்!

தினமலர்  தினமலர்
குருநாதர் கே.பாக்யராஜ்க்கு பார்த்திபனின் சாதனை சல்யூட்!

டைரக்டர் கே.பாக்யராஜிடத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் டைரக்டர் ஆர்.பார்த்திபன். அதையடுத்து புதிய பாதை படத்தை இயக்கிய அவர், இப்போதுவரை படங்கள் இயக்கி நடித்து வருகிறார். தற்போது கோடிட்ட இடத்தை நிரப்புக என்றொரு படத்தை சாந்தனுவை நாயகனாக வைத்து இயக்கி அதில் தானும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் ஆடியோ விழா நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. அப்போது தனது குருநாதரான பாக்யராஜின் சாதனைகளுக்கு சல்யூட் அடிக்கும் வகையில் அவருக்கு பாராட்டு விழாவும் நடத்தினார் பார்த்திபன். அந்த விழாவில், டைரக்டர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், ஷங்கர், விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், கங்கை அமரன், லிங்குசாமி, கரு.பழனியப்பன் மற்றும் நடிகர்கள் சிவகுமார், பிரபு, நெப்போலியன், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை நடிகைககள் சுகாசினி, ரோகினி ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

விழாவில், கே.பாக்யராஜின் படங்கள் பற்றியும், அவருடன் பணியாற்றிய அனுபவங்கள் பற்றி மலரும் நினைவுகளை அனைவருமே பகிர்ந்து கெண்டனர். அதோடு, எப்போதுமே புதுமைகளை செய்யும் பார்த்திபன் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிப்பது போன்று தனது படத்தின் ஆடியோ விழாவில் குருநாதருக்கு பாராட்டு விழாவும் நடத்தி விட்டார். இதேபோன்று டைரக்டர் கே.பாக்யராஜ், தனது குருநாதரான பாரதிராஜாவுக்கும தனது தலைமையில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என மேடையில் பேசிய சிலர் அவரிடம் அன்பு வேண்டுகோள் வைத்தனர். முன்னதாக, கே.பாக்யராஜ்க்கு பல நினைவு பரிசுகள் மேடையில் வழங்கப்பட்டது. அப்போது ஒரு ஆளுயுற பேனாவும் வழங்கப்பட்டது.

மூலக்கதை