எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். முதல்வர்களாக இருந்தபோது நடந்த ‘அந்த’ சம்பவமே எஸ்.3 கதை: சூர்யா
எம்.ஜி.ஆரும், என்.டி.ராமாராவும் முதல்வர்களாக இருந்தபோது நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எஸ். 3 படத்தை எடுத்துள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் எஸ் 3. படம் டிசம்பர் 16ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படம் குறித்து சூர்யா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
1997ம் ஆண்டு நேருக்கு நேர் படம் மூலம் என் சினிமா வாழ்க்கையை துவங்கினேன். துரைசிங்கம் போன்ற கதாபாத்திரத்திலும், சிங்கம் போன்ற அதிரடி ஆக்ஷன் கதையிலும் நடிப்பேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை.
ஒரு நடிகர் ஒரே இயக்குனருடன் மீண்டும் மீண்டும் பணியாற்றுவது இல்லை. பாலசந்தர், பாரதிராஜா காலத்தில் தான் அது நடந்தது. நான் ஹரியின் இயக்கத்தில் 5 படங்களில் நடித்துள்ளேன்.
சிங்கம் மற்றும் அதன் இரண்டாம் பகுதியும் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் சிங்கம் 3 படத்திற்கான கதை கிடைத்துள்ளதாக ஒரு நாள் ஹரி என்னிடம் கூறினார். கதை பிடித்ததால் படத்தை முடித்துவிட்டோம்.
சிங்கம் 3 படத்தின் கதை விசாகப்பட்டினத்தில் நடப்பது போன்று எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எம்.ஜி.ஆரும், ஆந்திராவில் என்.டி.ராமாராவும் முதல்வர்களாக இருந்தபோது இரு மாநிலங்களுக்கும் சம்பந்தப்பட்ட விஷயம் ஆந்திராவில் நடந்தது. இதையடுத்து இரு முதல்வர்களும் கலந்தாலோசித்து தமிழக போலீஸ் குழு ஆந்திர போலீசாருக்கு உதவ அங்கு சென்றது. அதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் எஸ்.3.
எஸ். 3 படத்தில் எனக்கும், அனுஷ்காவுக்கும் திருமணம் நடக்கும் காட்சி உள்ளது. அடுத்ததாக விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டத்தில் நடுத்தர வயது நபராக நடிக்கிறேன்.