பண்டிகை விற்பனையை அதிகரிக்க வேர்ல்பூல் நிறுவனம் முடிவு
புதுடில்லி : வேர்ல்பூல் நிறுவனம், பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில், பண்டிகை காலம் துவங்கியுள்ளதால், விற்பனையை, இரு மடங்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, மொத்த விளம்பர செலவில், 40 சதவீதத்தை, அடுத்த, 45 நாட்களுக்கு செலவிட திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் சந்தைப்படுத்தும் பிரிவு துணைத் தலைவர், கபில் அகர்வால் கூறியதாவது: ஓணம் முதல், எங்கள் நிறுவனத்தின் பண்டிகை கால விற்பனை துவங்கியுள்ளது. நல்ல பருவமழை, அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதிய குழுவின் புதிய சம்பளம் போன்றவற்றால், பணப்புழக்கம் அதிகமுள்ளது. எனவே, வாடிக்கையாளர் விரும்பும் வகையில், புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும். இதன் மூலம், எங்கள் விற்பனை இரு மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.