உள்கட்டமைப்பு துறையில் ஜி.எஸ்.டி.,யின் தாக்கம்
ஜி.எஸ்.டி., என குறிப்பிடப்படும் சரக்கு மற்றும் சேவை வரியால்,உள்கட்டமைப்புத் துறையில் ஏற்படக்கூடிய தாக்கம் பற்றி ஒரு பார்வை:
மிகப்பெரிய வரி சீர்திருத்தம் என வர்ணிக்கப்படும் ஜி.எஸ்.டி., மசோதா பார்லிமென்டில் நிறைவேறியதை அடுத்து, இதை அடுத்த ஆண்டு வாக்கில் அமலுக்கு கொண்டு வருவதற்கான சட்ட வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே பல்வேறு துறைகளில் ஜி.எஸ்.டி., செலுத்தக்கூடிய தாக்கம் பற்றியும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த பின்னணியில், நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாக அமையும் உள்கட்டமைப்புத் துறையில் ஜி.எஸ்.டி., தாக்கம் செலுத்தக்கூடிய அம்சங்கள்:
மின்சக்திஜி.எஸ்.டி., வரியில் இருந்து மின்சாரம் விலக்கி வைக்கப்பட முடிவு செய்யப்பட்டிருப்பதால், மின்சார கட்டணம் உயரலாம் என கருதப்படுகிறது. மின் உற்பத்தி நிறுவனங்கள், மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்களுக்கு ஜி.எஸ்.டி., வரி செலுத்த வேண்டும். ஆனால், அவற்றின் உற்பத்திக்கு விலக்கு இருப்பதால், இப்படி செலுத்தப்படும் வரியை திரும்ப கோர முடியாது. இதனால் ஏற்படும் கூடுதல் உற்பத்தி செலவு, வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்பதால்கட்டணம் உயரும்.
சிமென்ட்கட்டுமானம் உள்ளிட்ட உள்கட்டமைப்பில் சிமென்ட் முக்கிய அம்சமாக இருக்கிறது. ஜி.எஸ்.டி., இதன் மீது சாதகமான தாக்கத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சிமென்ட் மீதான ஒட்டுமொத்த மறைமுக வரி 25 சதவீதம் வரை இருப்பதாக கருதப்படுகிறது. ஜி.எஸ்.டி.,யில் இது குறையும் என்பதோடு, சரக்கு போக்குவரத்துக்கான செலவு குறைவதற்கான வாய்ப்பு இருப்பதும் சாதகமாக அமைந்து, விலை குறைய உதவும்.
சரக்கு போக்குவரத்துஇந்த துறையில் தான் ஜி.எஸ்.டி., கணிசமான அளவு தாக்கம் செலுத்தும் என வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். இதற்கு அடிப்படையாக நான்கு முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டுகின்றனர். முதலாவதாக இந்தியா ஒரு பெரிய சந்தையாக மாறும். எனவே, சரக்கு குடோன்கள் அளவில் பெரிதாகி, அவற்றின் எண்ணிக்கை குறையும். இரண்டாவதாக செயல்பாட்டில் முக்கிய மாற்றம் ஏற்பட்டு பெரிய அளவிலான டிரக்குகள் பயன்பாட்டிற்கு வரும்.இதன் காரணமாக, சரக்கு போக்குவரத்திற்கான செலவு குறைந்து, பல நிறுவனங்கள் இந்த பணியை வெளி நிறுவனங்களிடம் ஒப்படைக்க முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில எல்லைகளுக்கு இடையே உள்ள தடைகள் மற்றும் சோதனை சாவடிகளில் ஏற்படும் காத்திருப்பு மற்றும் தாமதம் நீங்கி செயல்திறன் மேம்படும். இவற்றின் பலனாக செலவுகள் 20 முதல் 30 சதவீதம் குறையலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பொறியியல் நிர்வாகம்ஆலோசனை, பொறியியல் நிர்வாகம் மற்றும் திட்ட மேலாண்மை சேவைகளில் எதிர்மறையான தாக்கம் ஏற்படும். இந்த சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்கள் தற்போது செலுத்தி வரும் 15 சதவீத வரியை விட கூடுதல் வரி செலுத்த நேரிடும்.தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளால் பல்வேறு வரிச்சலுகைகள் அளிக்கப்படுகின்றன. வரி விடுமுறை சலுகைகளும் அமலில் உள்ளன. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சலுகைகள் அவற்றின் காலம் வரை தொடர அனுமதிக்கப்படலாம் என்றாலும், பின்னர் அவை நீக்கப்படலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.
விமானச்சேவைகச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் உள்ளிட்டவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எதிர்மறையான பலனை உண்டாக்கும். விமான சேவை நிறுவனங்கள் தற்போது எரிபொருள் வரி மீது சென்வாட் கிரெடிட் கோரி வருகின்றன. ஆனால், இது மாறலாம். இதனால் விமான கட்டணம் உயரலாம்.
பணிகளுக்கான ஒப்பந்தத்தில் ஜி.எஸ்.டி., மேலும் தெளிவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறியியல், கட்டுமானம் மற்றும் கொள்முதல் சார்ந்த பணிகள் சேவையாக கருதி வரி விதிக்கப்படும். பணி ஒப்பந்தங்களில் தற்போதுள்ள பிரச்னைகளை நீக்கவும் இது வழி செய்யும். சாதகமான மற்றும் பாதகமான பலன்கள் கலந்து இருந்தாலும், நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது சாதகமான பலன்களே அதிகம் இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, தற்போதுள்ள சிக்கலான வரி செயல்முறை எளிதாகி செயல்திறனை அதிகரிக்க உதவும் என்ற கருத்தும் உள்ளது.