இலங்கை: ஏசிஃஎப் பணியாளர்கள் படுகொலையின் 10-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

BBC  BBC
இலங்கை: ஏசிஃஎப் பணியாளர்கள் படுகொலையின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

இலங்கையில் பிரெஞ்சு தொண்டு நிறுவனமான 'ஆக்ஷன் கோன்ட்ரே லா பெயிம்' (ஏசிஃஎப்) நிறுவனத்தின், உள்ளுர் பணியாளர்கள் 17 பேரின் படுகொலையின் சூத்திரதாரிகள் 10 வருடங்களாகியும் கண்டு பிடிக்கப்பட்டு சட்டத்தின் முன்னர் நிறுத்தப்படாதது குறித்து உறவினர்களினால் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களை இன்று (வியாழக்கிழமை) 10-வது ஆண்டு நினைவு அனுசரிக்கும் உறவினர்கள், தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

2006-ஆம் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூரில், ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே மோதல் நடைபெற்ற காலத்தில், இந்த படுகொலைச் சம்பவம் நடைபெற்றது.

விடுதலைப்புலிகள், ராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் பிரவேசித்து விட்ட நிலையில், இரு தரப்புக்குமிடையே மோதல் தீவிரமடைந்திருந்தது.

மூதூர் நகரில், ராணுவக் கட்டுப்பாட்டு பகுதியில் அமைந்திருந்த அலுவலகத்திற்குள் வைத்து இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்

ஜுலை மாதம் 31-ஆ ம் வழக்கம் போல் அலுவலகத்திற்கு சென்றிருந்த பணியாளர்கள், மோதல் காரணமாக அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாத நிலையில்தான் அங்கு தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது.

தொலைபேசி ஊடகத் தொடர்பில் இருந்த அவர்களின் தொடர்புகள், ஆகஸ்ட் 3-ஆம் தேதியுடன் துண்டிக்கப்பட்டு விட்டதாக உறவினர்கள் கூறுகின்றார்கள்.

2006-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதியன்று நடைபெற்றதாகக் கருதப்படும் இந்த சம்பவத்தின் போது, அங்கு 4 பெண்கள் உட்பட 17 உள்ளுர் பணியாளர்கள் மட்டுமே தங்கியிருந்தனர் . அங்கு தங்கியிருந்த அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர் இவர்களில் தகப்பன் , மகள் உள்பட 16 பேர் தமிழர்கள். ஒருவர் இஸ்லாமியர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவின் பதவிக் காலத்தில் நடைபெற்ற இப்படுகொலை சம்பவம் சர்வதேச ரீதியில் இலங்கை மனித உரிமை நிலவரம் தொடர்பாக மற்றுமோர் களங்கமாகவே கருதப்பட்டு கண்டனங்கள் வெளியிடப்பட்டன.

மனித நேயப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உள்ளுர் பணியார்களின் இந்த படுகொலைக்கு, இலங்கை அரசாங்கம் தான் பொறுப்பு கூற வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் உள்பட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

இப்படுகொலை உள்பட உள் நாட்டில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, விசாரணை செய்ய மகிந்த ராஜபக்க்ஷ,ஓய்வு பெற்ற நீதியரசர் நிஸங்க உடலகம தலைமையில் ஆணைக் குழுவொன்றை நியமித்திருந்தார்.

இந்த படுகொலை சம்பவத்தில் இலங்கை படையினருக்கு தொடர்புகள் கிடையாது . இருப்பினும் முஸ்லீம் ஊர்காவல் படையினருக்கு தொடர்புகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆணைக் குழுவின் தலைவர் தெரிவித்திருந்தார்.

சம்பவம் நடைபெற்று, இன்றுடன் 10 வருடங்களாகின்ற நிலையில், கொல்லப்பட்டவர்களின் உறவுகளை, பிபிசி தமிழோசைக்காக சந்தித்த எமது செய்தியாளர் ஆர். உதயகுமார், இந்த சம்பவத்தில் ஏற்பட்ட இழப்புகளிலிருந்து அவர்கள் இன்னமும் முழுமையாக விடுபடவில்லை என்பதை உணரக் கூடியதாக இருந்தது என்கின்றார் .

ஏசிஃஎப் நிறுவனம், மரண செலவுடன் இழப்பீட்டுத் தொகையாக ஐந்து லட்சம் ரூபாய் மட்டுமே, தங்களுக்கு வழங்கியதாக சம்பவத்தில் தனது மகளை இழந்த பிலோமினா சிவப்பிரகாசம் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் நேரிலும், தொலைபேசியிலும் தொடர்புகளை பேணி வந்த அந்நிறுவனம், கடந்த 7 வருடங்களாக தொடர்புகளை துண்டித்துள்ள நிலையில், அந்நிறுவனம் கூட தங்களை கைவிட்டு விட்டதாகவே தான் உணர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் ,பதவிக்கு வந்த புதிய அரசாங்கமும் இது பற்றி பேசுவதில்லை என்றும் பிலோமினா சிவப்பிரகாசம் தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்திக் கொண்டார்.

இந்த படுகொலையுடன் தொடர்புடையவர்கள் பற்றி பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அறிந்திருந்தாலும் அதனை வெளிப்படுத்த முடியாதவர்களாக இருப்பது போல் தெரிகின்றது.

சம்பவத்தில், கணவனையும் மகளையும் இழந்த சோகத்திலிருந்து மீள முடியாத நிலையில் சிவனேஸ்வரி கணேஷ் " செய்தவர்கள் யார் என தெரியாது? " என்கின்றார்

மனித நேய பணியில் ஈடுபட்டவர்களுக்கு நேர்ந்த இந்த கொடூரத்திற்கு பொறுப்பானவர்கள் யார் ? என்பதை வெளிப்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

யுத்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்படவுள்ள சிறப்பு நீதிமன்றம் நம்பகத்தன்மையுடன் விசாரணைகளை நடத்தி நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம், சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையொன்றில் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை