இந்திய கிரிக்கெட் வீரர் அமெரிக்காவில் மூன்றாவது திருமணம்! (PHOTOS)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மொஹமத் அஸாருதீன், தான் 3 ஆவது தடவையாக திருமணம் செய்துகொண்டுள்ளதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார்.
52 வயதான மொஹம்மத் அஸாருதீன் தனது இரண்டாவது மனைவியான நடிகை சங்கீதா பிஜ்லானியை 2010 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
அதன்பின் அமெரிக்கப் பிரஜையான யுவதியொருவரை அஸாருதீன் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
தற்போது ஷெனோன் தல்வார் எனும் மேற்படி யுவதியுடன் அஸாருதீன் நெருங்கிப் பழகி வருகிறார்.
லொஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த ஷெனோன் மேரி தல்வார், தற்போது டில்லியில் வசிக்கிறார். பெஷன் டிஷைனரான அவர், யோகாசன ஆசிரியருக்கான சான்றிதழையும் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அஸாருதீனும் ஷெனோன் மேரியும் நெருக்கமாக காணப்படும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் ஏற்கெனவே வெளியாகியிருந்தன.
ஷெனோன் மேரி தனது மிகச்சிறந்த நண்பி என மொஹம்மத் அஸாருதீன் கூறியிருந்தார். இந்நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அஸாருதீனின் சாரதியான ஜான் மொஹம்மத் அண்மையில் உயிரிழந்ததையடுத்து அவரின் வீட்டுக்கு அஸாருதீனும் ஷெனோன் மேரியும் சென்றதாகவும் அப்போது அஸாருதீனின் மனைவி என ஷெனோன் மேரி அறிமுகப் படுத்தப்பட்டதாகவும் அச்செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இச்செய்திகளை அஸாருதீன் நிராகரித்துள்ளார்.
“எனது 3 ஆவது திருமணம் தொடர்பாக செய்திகள் தவறானவையும் பொய்யானவையுமாகும். வெளியிடுவதற்குமுன் தரவுகளை சரிபார்த்துக்கொள்ளுங்கள்” என அவர் கூறியுள்ளார்.
1963 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தவர் மொஹம்மத் அஸாருதீன்.
1984 டிசெம்பர் 31 ஆம் திகதி ஆரம்பமான இங்கிலாந்துக்கு எதிரான போட்டி மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார்.
99 டெஸ்ட் பேட்டிகளிலும் 334 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் அவர் இந்தியாவின் சார்பில் விளையாடினார்.
சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் சிறந்த களத்தடுப்பாளராகவும் விளங்கிய அவர். இந்திய கிரிக்கெட் அணியின் மிக வெற்றிகரமான அணித் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார்.
எனினும், அவர் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக 2000 ஆம் ஆண்டு குற்றச்சாட்டு கிளம்பியதையடுத்து அவரின் கிரிக்கெட் வாழ்க்கை பாதிப்படைந்தது. அவருக்கு ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டது.
தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த அஸாருதீன் 2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார். தன் மீதான தடைக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டு வந்தார்.
2012 ஆம் ஆண்டு நீதிமன்றத்தினால் அத்தடை நீக்கப்பட்டது. எனினும், அப்போது 49 வயதானவராக இருந்த அஸாருதீனின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுற்றிருந்தது.
நவ்ரின் என்பவரை முதல் தடவையாக அஸாருதீன் திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு இரு மகன்கள் பிறந்தனர். 1996 ஆம் ஆண்டு நவ்ரினை விவாகரத்துச் செய்துவிட்டு பொலிவூட் நடிகை சங்கீதா பிஜ்லானியை அஸாருதீன் திருமணம் செய்தார்.
2010 ஆம் ஆண்டு இவர்கள் பிரிந்தனர். அஸாருதீனின் மகன் அயாஸுதீன் 2011 ஆம் ஆண்டு வாகன விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்திருந்தார்.
2015-12-25