20,000 ரன் எடுத்து புதிய உலக சாதனை படைத்த கோஹ்லியை கொண்டாடும் டெல்லி சங்கம்...செப். 12ல் விழா நடத்த ஏற்பாடு தீவிரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
20,000 ரன் எடுத்து புதிய உலக சாதனை படைத்த கோஹ்லியை கொண்டாடும் டெல்லி சங்கம்...செப். 12ல் விழா நடத்த ஏற்பாடு தீவிரம்

புதுடெல்லி:  சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த இந்திய கேப்டன் கோஹ்லியை கவுரவிக்கும் விதமாக விழா எடுக்க டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 12ம் தேதி நடக்கவுள்ள நிகழ்ச்சியில் ஒட்டு மொத்த இந்திய கிரிக்கெட் அணியை கவுவரப்படுத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

சர்வதேச ஒருநாள் அரங்கில் ஜாம்பவான் சச்சினின் சாதனைகளை அதிவேகத்தில் கோஹ்லி துரத்தி வருகிறார்.   இந்நிலையில் சமீபத்தில் முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு சதம் விளாசி கோஹ்லி அசத்தினார். தவிர, 10 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற புது உலக சாதனையும் கோஹ்லி படைத்தார்.

டெல்லியைச் சேர்ந்த கோஹ்லியின் சாதனைகளை கவுரவிக்கும் வகையில், டெல்லியில் உள்ள கிரிக்கெட் மைதானமான பெரோஷா கோட்லாவின் ஒரு ஸ்டாண்டுக்கு விராட் கோஹ்லி பெயர் வைக்கப்படவுள்ளது.

கடந்த 2008, ஆகஸ்ட் 18ல் இலங்கை அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் கோஹ்லி அறிமுகமானதை நினைவுபடுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி கிரிக்கெட் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோஹ்லியைப் போலவே முன்னாள் இரண்டு டெல்லி வீரர்களான பிஷன் சிங் பெடி, மோஹிந்த அமர்நாத் ஆகியோரின் பெயர்களில் ஸ்டாண்டுகள் உள்ளன. ஆனால் அவர்கள் ஓய்வுக்கு பின்பே இந்த கவுரவத்தை பெற்றனர்.   ஆனால் கோஹ்லி, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் போதே இந்த கவுரவத்தை பெற உள்ளார்.

இதேபோல முன்னாள் அதிரடி மன்னன் சேவக், அஞ்சும் சோப்ரா ஆகியோரின் பெயர்களில் கோட்லா மைதானத்தில் கேட்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை