தற்கொலை முயற்சி: பிக் பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட மதுமிதா

தினமலர்  தினமலர்
தற்கொலை முயற்சி: பிக் பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட மதுமிதா

தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பிக் பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் போட்டியாளர்களில் மக்களிடம் அதிக ஆதரவைப் பெற்றிருந்த போட்டியாளர்களுள் ஒருவராக இருந்தவர் நடிகை மதுமிதா. கடந்த வாரம் டைட்டிலை வெல்லும் வாய்ப்புள்ளவர்கள் பற்றி, சகபோட்டியாளர்களிடம் கமல் நடத்திய கருத்துக்கணிப்பில் மூன்றாவது இடத்தில் வந்தவர்.

நிகழ்ச்சி துவங்கிய ஆரம்பத்தில் தமிழ்ப்பொண்ணு பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர். அப்போது ஷெரீனுக்கும், மதுவுக்கும் இடையே பெரிய சண்டையே நடந்தது. அதன்பிறகு சண்டைகளில் இருந்து ஒதுங்கி இருந்தவர், கடந்த வாரம் மீண்டும் பல சர்ச்சைகளில் சிக்கினார்.

பிக் பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர்கள், பெண்களை அடிமையாக நடத்துவதாகக் கூறி கவினிடம் அவர் சண்டை போட்டார். இதனால் வீட்டில் இரு அணிகளாக போட்டியாளர்கள் பிரிந்தனர். அதோடு இந்த வார தலைவருக்கான போட்டியில் மதுமிதா கள்ளாட்டம் செய்ததாகவும் புகார் எழுந்தது.

இப்படி பல சர்ச்சைகளில் சிக்கியிருந்த நிலையில் தான், மது அதிரடியாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது தெரிய வந்துள்ளது. வாக்குவாதத்தின் போது தனது வாக்கை நிரூபிக்க இத்தகைய முடிவை தான் எடுத்ததாக மது கமலிடம் கூறினார்.

அவர் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என்பது அவர் கையில் இருந்த கட்டு மூலமே உறுதியானது. ஆனாலும் வெற்றியாளராகும் வாய்ப்பு அதிகமாக இருந்த போட்டியாளர் இப்படி பாதியில் வெளியேறியது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக கமல் மதுவிடம் கூறினார். பெரும்பாலான மக்கள் மனதில் உள்ள கருத்தும் அதுவே ஆகும்.

மூலக்கதை