பொங்கலுக்கு வர்றோம் : ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

தினமலர்  தினமலர்
பொங்கலுக்கு வர்றோம் : ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

அன்பானவன் அசராவதன் அடங்காதவன் படம் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கும், அப்படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பனுக்கும் பிரச்னை ஓடிக் கொண்டிருக்கிறது. இடையில் அமைதியாக இருந்த இந்த பிரச்னை இப்போது மீண்டும் கிளம்பி உள்ளது.

இதுதொடர்பாக மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தை நாடியிருக்கிறார் மைக்கேல் ராயப்பன். இந்த விஷயத்தில் சிம்புவிற்கு மீண்டும் ரெட் கார்ட் போட ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், சுந்தர் சி இயக்கத்தில் அவர் நடித்து வரும் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சிம்பு ரசிகர்கள் விஷால் மீது சரமாரியாக கண்டனங்களை சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்

அதில் அவர் கூறியிருப்பதாவது : என்னை நேசிப்பவர்களுக்கும், ரசிகர்களுக்கும் அன்பான வேண்டுகோள். திரைத்துறையில் சமீபத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து வருந்த வேண்டாம். எந்த தனிநபரும் நம்மை ஓரங்கட்ட முடியாது. எதுவாக இருந்தாலும் கவுன்சில உறுப்பினர்களால் குழுவாக எடுக்கப்படும். அதனால் பதற்றமடைய வேண்டாம். யாரையும் குறிவைத்து விமர்சிக்க வேண்டாம்.

எப்போதும் அன்பையே பரப்புங்கள். உங்களின் ஆதரவுக்கு நன்றி, நீங்கள் இல்லாமல் நான் இல்லை. நமது கடமையை செய்வோம். கண்டிப்பாக பொங்கலுக்கு வர்றோம் என்றார்.

மூலக்கதை