புரோ கபடி லீக் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி
புனே: புரோ கபடி போட்டியில், புனே அணியை 36-31 என்ற புள்ளிக் கணக்கில், தமிழ் தலைவாஸ் அணி 2 வது வெற்றியை பதிவு செய்தது. புரோ கபடி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
6வது லீக் போட்டி, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நேற்று நடந்தது. இதில், தமிழ் தலைவாஸ், புனே அணிகள் பலப்பரிட்சை நடத்தின.
இப்போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். ஜஸ்விர் சிங் முதல் புள்ளியை பெற்றுத்தந்தார்.
முதல்பாதி ஆட்டத்தில் 16-15 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் முன்னிலை வகித்தது. 2வது பாதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாகூர் புள்ளிகளை குவித்து அசத்தினார்.
இறுதியாக தமிழ் தலைவாஸ் அணி 36-31 என்ற புள்ளிக்கணக்கில் புனே அணியை வீழ்த்தியது.
தமிழ் தலைவாஸ் அணிக்கு 2 வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை அணி வெற்றி: புனேயில் நடந்த மற்றொரு கபடி ஆட்டத்தில், மும்பை அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் மும்பை வீரர் சித்தார்த் 17 புள்ளிகளை குவித்து எதிரணிக்கு சவாலாக விளங்கினார்.
முதல் பாதி ஆட்டத்தில் 17-12 என்ற புள்ளிக் கணக்கில், மும்பை அணி முன்னிலை வகித்தது. இதேபோல் 2வது பாதியிலும் மும்பை அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
இறுதியில், 41-20 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை, மும்பை அணி வீழ்த்தியது. தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் அபோஸர் மிகானி இல்லாததால் அந்த அணி பெரும் பின்னடைவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.