ஐ.எல்., அண்டு எப்.எஸ்., பைனான்ஷியல் தலைமை செயல் அதிகாரி ராஜினாமா
மும்பை: அடிப்படை கட்டமைப்பு துறையைச் சேர்ந்த, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமத்தின் ஓர் அங்கமாக, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., பைனான்ஷியல் சர்வீசஸ் உள்ளது.இந்த, வங்கி சாரா நிதிச் சேவை நிறுவனத்தில் இருந்து, சமீபத்தில், ஐந்து இயக்குனர்கள் விலகியுள்ளனர். இந்நிலையில், நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான, ரமேஷ் சி பாவா, திடீரென பதவி விலகியுள்ளார்.ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமத்தின் நிதி நெருக்கடி தான், இவர் பதவி விலக காரணம் என, கூறப்படுகிறது.இம்மாத துவக்கத்தில், இக்குழுமம், ‘சிட்பி’க்கு, 1,000 கோடி ரூபாய் கடனை திரும்ப அளிக்க தவறியது. இந்நிலையில், நேற்று முன்தினம், ஐ.டி.பி.ஐ.,க்கு, 500 கோடி ரூபாய் கடனை, திரும்ப அளிக்க முடியவில்லை என, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனம் தெரிவித்தது.ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமத்தின், 35 ஆயிரம் கோடி ரூபாய் கடனில், பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் கடன், 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உள்ளது.நெடுஞ்சாலை திட்டங்களில், மத்திய அரசு, பல ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளதால், உரிய நேரத்தில் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை என, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, நிதி திரட்டும் நோக்கில், 28ல் பங்கு முதலீட்டாளர்கள் கூட்டத்தை, இக்குழுமம் கூட்ட உள்ளது.