ராதிகா தயாரிக்கும் பிரம்மாண்ட சரித்திர தொடர் : 7 வேடங்களில் நடிக்கிறார்

தினமலர்  தினமலர்
ராதிகா தயாரிக்கும் பிரம்மாண்ட சரித்திர தொடர் : 7 வேடங்களில் நடிக்கிறார்

நடிகை ராதிகா தனது ராடன் நிறுவனத்தின் மூலம் பல ஆண்டுகளாக சின்னத்திரை தொடர்களை தயாரித்து, நடித்து வருகிறார். சின்னத்திரையில் தனக்கென தனி அடையாளத்தை பதித்துள்ளார். தற்போது வட நாட்டில் ஹிந்தியில் தயாராகும் பிரமாண்ட சரித்திர தொடர்கள் டப் செய்யப்பட்டு இங்குள்ள சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் ராதிகா, தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சந்திரகுமாரி என்ற பிரமாண்ட சரித்திர தொடரை தயாரிக்கிறார்.

தற்போது, ராதிகா, வாணி ராணி தொடரில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் விரைவில் முடிவடைய இருக்கிறது. அதன் பிறகு சந்திரகுமாரி ஒளிபரப்பாக இருக்கிறது. வாணி ராணி தொடரை நடித்து முடித்து விட்ட ராதிகா தற்போது சந்திரகுமாரி சீரியலில் நடித்து வருகிறார்.

தற்போது இதன் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள ஸ்டூடியோக்களில் போடப்பட்டுள்ள அரங்கில் நடந்து வருகிறது. இந்த தொடர் சரித்திர கதையும், நிகழ்கால கதையும் கொண்ட பேண்டசி தொடர். இதில் நிகழ்கால காட்சிகளை சி.ஜே.பாஸ்கரும், சரித்திர கால காட்சிகளை பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவும் இயக்குகிறார்கள்.

ராதிகா 7 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. சரித்திர கால கதையில் 4 வேடத்திலும், நிகழ்கால கதையில் 3 வேடத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது. நடிகை தாமிரபரணி பானு, ராதிகாவின் மகளாக நடிக்கிறார். இவர்கள் தவிர நிரோஷா, உமா ரியாஸ், ஆகியோரும் நடிக்கிறார்கள். பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் சிற்பி இசை அமைக்கிறார், பாலமுருகன், பிலிப் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்கள். இரண்டு யூனிட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

மூலக்கதை