நுால் வரத்து குறைவு: இலவச வேட்டி – சேலை உற்பத்தி பாதிப்பு
ஈரோடு : நுால் விலை உயர்ந்து, அரசு சார்பில் நுால் வழங்குதல் குறைந்ததால், அரசின் இலவச வேட்டி, சேலை உற்பத்தி பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏழை, எளியோருக்கு பொங்கல் பண்டிகையின்போது வழங்குவதற்கான இலவச வேட்டி, சேலை உற்பத்திக்காக, அரசு, 520 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உள்ளது. மொத்தம், 1.50 கோடி வேட்டி, 1.50 கோடி சேலை உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயித்து உள்ளது.
நுால் விலை :
ஈரோடு, நாமக்கல், கோவை, திருப்பூர், திருநெல்வேலி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் உள்ள விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவு மூலம், இப்பணி நடந்து வருகிறது. கைத்தறி துறை மூலம், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு நுால், கூலி வழங்கி, சங்க உறுப்பினர்கள் மூலம் வேட்டி, சேலை உற்பத்தி செய்யப்படுகிறது.இலவச வேட்டி, சேலை தயாரிப்புக்கு, அரசு டெண்டர் மூலம், 1 கிலோ, 161 ரூபாய் என, நுால் விலை நிர்ணயித்திருந்தனர்.
தற்போது நுால் விலை, வெளி மார்க்கெட்டில் உயர்ந்து, 180 முதல், 190 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அரசு கொள்முதல் செய்யும் ரகம், 181 ரூபாயாக உள்ளது. இதனால், செப்., மாத உற்பத்திக்கு, தமிழக அளவில், 350 டன் நுாலுக்கு பதில், 125 டன் மட்டுமே வரத்தானது.
ஒதுக்கீடு :
இதில், ஈரோடுக்கு, 40 டன், திருச்செங்கோடு, 40 டன், கோவை, 10 டன், மீதமுள்ள நுால், விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுஉள்ளது.
இது பற்றி, கைத்தறி மற்றும் துணி நுால் துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு சார்பில், ஈரோடு மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட துணிகளை உற்பத்தி செய்து வழங்க, சொசைட்டிகள் பணிகளை செய்து வருகின்றன. அந்தந்த மாத ஒதுக்கீட்டின்படி, நுால் பெறப்பட்டு, நெசவாளர்களுக்கு வழங்கப்படும். நடப்பு மாதத்துக்கு, நுால் வரத்து குறைந்துள்ளது.
கூடுதல் தொகை :
நுால் விலை உயர்வு குறித்து, கைத்தறி துறை சார்பில் அரசிடம் தெரிவித்து, கூடுதல் தொகையை பெற முயலும். நடப்பு மாதம் நுால் குறைவாக வந்துள்ளதால், சற்று தொய்வு ஏற்பட்டு உள்ளது. ஆனால், வரும் மாதங்களில் கூடுதல் நுால் வழங்கி, இப்பணியை விரைவுபடுத்த, துறை ரீதியாக வலியுறுத்தப்படும். பொங்கலுக்கு நாட்கள் உள்ளதால், தேவையான முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.