பங்கு வெளியீட்டில் டி அண்டு டி இன்ப்ரா
புதுடில்லி : கட்டுமான நிறுவனமான, டி அண்டு டி இன்ப்ரா, பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபியிடம் விண்ணப்பித்துள்ளது.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இந்நிறுவனம், சாலைகள், மேம்பாலங்கள், பாலங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம்,75 லட்சம் பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் திரட்டப்படும் நிதியை, தேவையான உபகரணங்கள் வாங்கவும், நடைமுறை மூலதன தேவைகளுக்கும், நிர்வாகச் செலவுகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்து உள்ளது.
‘‘பங்கு வெளியீட்டுக்கு வருவதன் மூலம், எங்கள் பிராண்டை பிரபலப்படுத்தவும், எதிர்கால வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை பெறவும் முடியும் என கருதுகிறோம்” என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஹெம் செக்யூரிட்டிஸ் நிறுவனம் ஏற்றுள்ளது. ஏற்கனவே, இந்த மாத துவக்கத்தில், ஸ்ரீ பஜ்ரங் பவர், இஸ்பத் நிறுவனம், மற்றும் ஏஞ்சல் புரோக்கிங் ஆகிய நிறுவனங்களும் பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, செபியிடம் விண்ணப்பித்துள்ளன.