இந்தியாவுடன் 5வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து 198/7 ரன் எடுத்து தடுமாற்றம்

தினகரன்  தினகரன்
இந்தியாவுடன் 5வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து 198/7 ரன் எடுத்து தடுமாற்றம்

லண்டன்: இந்திய அணியுடனான 5வது மற்றும் கடைசி  டெஸ்ட் போட்டியில் நிதானமாக ஆடிய இங்கிலாந்து திடீர் சரிவை சந்தித்தது. ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழந்து 198 எடுத்துள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 3-1 என முன்னிலை வகிப்பதுடன் தொடரையும் கைப்பற்றிவிட்ட நிலையில், கடைசி டெஸ்ட் லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, அஷ்வின் நீக்கப்பட்டு அறிமுக வேகம் ஹனுமா விகாரி, ரவீந்திர ஜடேஜா இடம் பெற்றனர். இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடும் 292வது வீரர் என்ற பெருமை விஹாரிக்கு கிடைத்துள்ளது. டெஸ்டில் அறிமுகமான பின்னர், ஹர்திக் முதல் முறையாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.டாசில் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதல் பேட் செய்ய முடிவு செய்தார். இங்கிலாந்து தொடக்க வீரர்களாக அலஸ்டர் குக், ஜென்னிங்ஸ் களமிறங்கினர். இந்த டெஸ்ட் போட்டியில் குக் ஓய்வு பெற உள்ளதால், இந்திய வீரர்கள் இரு பக்கமும் வரிசையாக நின்று அவரை கைதட்டி வரவேற்றனர். குக் - ஜென்னிங்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தது. ஜென்னிங்ஸ் 23 ரன் எடுத்து ஜடேஜா சுழலில் ராகுல் வசம் பிடிபட்டார். அடுத்து குக் - மொயீன் அலி ஜோடி 2வது விக்கெட்டுக்கு மிக நிதானமாக விளையடி ரன் சேர்த்தது. இவர்களை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். கடைசி போட்டி என்பதால் கூடுதல் கவனத்துடன் விளையாடிய குக் 139 பந்தில் அரை சதத்தை நிறைவு செய்தார். திடீர் சரிவு: சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குக் 71 ரன் (190 பந்து, 8 பவுண்டரி) விளாசி பூம்ரா பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த கேப்டன் ஜோ ரூட், பேர்ஸ்டோ இருவரும் டக் அவுட்டாகி அணிவகுக்க, ஒரு விக்கெட் இழப்புக்கு 133 ரன் என்ற நிலையில் இருந்து 4 விக்கெட் இழப்புக்கு 134 ரன் என இங்கிலாந்து திடீர் சரிவை சந்தித்தது. அதன்பின்னர் வந்த பென் ஸ்டோக்ஸ் ஜடேஜாவின் சூழலில் எல்பிடபிள்யு முறையில் அவுட்டானார். நன்றாக ஆடி கொண்டிருந்த மொயின் அலி அரை சதம் எடுத்து வெளியேறிய நிலையில், சாம் குரன் டக் அவுட்டானார். இருவரது விக்கெட்டையும் இஷாந்த் கைப்பற்றினார். ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன் எடுத்துள்ளது.

மூலக்கதை