திடீர் ஓய்வு அறிவிப்பு ஏன் ? என் கனவுகளைவிட அதிகமானதை சாதித்துவிட்டேன்: அலிஸ்டர் குக் உருக்கமான கடிதம்
சவுதாம்டன்: இங்கிலாந்து டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர், அலிஸ்டர் குக். இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவர், தற்போது இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடிவருகிறார்.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது : இது, எனக்கு சோகமான நாளாக இருந்தாலும், நான் முகத்தில் சிரிப்பைக் காட்டிக்கொண்டிருக்கிறேன்.
நான் அனைத்தையும் கிரிக்கெட்டுக்குக் கொடுத்துவிட்டேன். என்னிடம் மீதம் எதுவுமில்லை.
நான் கனவு கண்டதைவிட அதிகமானதைச் சாதித்துவிட்டேன். கிரிக்கெட்டில், நீண்ட காலமாக மிகப் பெரிய ஜாம்பவான்களுடன் இணைந்து விளையாடுவதற்குரிய சலுகைகளைப் பெற்றிருந்ததாக உணர்கிறேன்.
இங்கிலாந்து அணி வீரர்கள் சிலருக்கு என்னுடைய முடிவு கடினமானதாக இருக்கலாம்.
ஆனால் எனக்குத் தெரியும், இது சரியான நேரம்.
சிறுவனாக மைதானத்தில் விளையாடிய காலத்திலிருந்து என்னுடைய வாழ்க்கை முழுவதும் நான் கிரிக்கெட்டை நேசிக்கிறேன். எங்களைப் பொழுதுபோக்குவதற்கும், நாட்டுக்காக விளையாடுவதற்காக அவர்கள் அளவு கடந்த பெருமைகொள்வதற்கும் அடுத்த தலைமுறை இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான சரியான நேரம் இது என்பது எனக்குத் தெரியும்.
கிரிக்கெட் வீரர்களாக, அடிக்கடி பல்வேறு பகுதிகளுக்குப் பயணப்படும் நாம், நம்முடைய வெற்றியில் நம்முடைய குடும்பத்தின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை அடிக்கடி உணர்வதில்லை. என்னுடைய குடும்பமும் நானும் 12 ஆண்டுகள் வெற்றிகரமாக என்னுடைய கனவை நிறைவுசெய்துள்ளோம்.
என்னுடைய குடும்பத்தினர் இல்லாமல் இது சாத்தியமாகியிருக்காது. ‘கடந்த சில மாதங்கள் நீடித்த தீவிர யோசனைக்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறலாம் என்று முடிவெடுத்துள்ளேன் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.