கடலூர் மக்களுக்கு தண்ணீர் வழங்கிய கத்தார் ரஜினி மக்கள் மன்றம்
தமிழகத்தில் பல பகுதிகளில் தண்ணீர் பிரச்னை நிலவுகிறது. குறிப்பாக சென்னை, கடலூரில் அதிகம் உள்ளது. இந்நிலையில், கத்தார் ரஜினி மக்கள் மன்றமும், கடலூர் தெற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றமும் இணைந்து, விருத்தாச்சலத்தில் 500 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் விநியோகம் செய்துள்ளனர்.
கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு பெரியசாமி அவர்கள் ஒவ்வொரு தெரு வழியாகச் சென்று ஒவ்வொரு வீடுகளிலும் நின்று இலவச குடிநீரை வழங்கினார். இந்த நற்பணியை கத்தார் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் வர்த்தக அணி செயலாளர் வெங்கடாஜலபதி, கடலூர் ரஜினி மக்கள் மன்றத்தினரோடு இணைந்து செய்தார்.
தண்ணீர் குடம் மட்டும் நிறையவில்லை, மனமும் மகிழ்ச்சியால் நிறைகிறது. குழந்தைகளையும் முதியவர்களையும் வைத்துக்கொண்டு நீர் இல்லாது தவித்து வரும் எங்களின் நிலைமையை உணர்ந்து தக்க நேரத்தில் உதவிய கத்தார் மற்றும் கடலூர் ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு நன்றி என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.