நிதி நெருக்கடியில் பி.எஸ்.என்.எல்., ரூ.5,000 கோடி கடன் வாங்க திட்டம்

தினமலர்  தினமலர்
நிதி நெருக்கடியில் பி.எஸ்.என்.எல்., ரூ.5,000 கோடி கடன் வாங்க திட்டம்

புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், நிதி நெருக்கடியை சமாளிக்க, 5ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிட்டுள்ளது.


முகேஷ் அம்பானியின், ‘ஆர்ஜியோ’ நிறுவனத்தின் வருகையால், பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட, தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள், இழப்பை சந்தித்துள்ளன.


மூலதன தேவை



கடந்த நிதியாண்டில், பி.எஸ்.என்.எல்., 2 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. அத்துடன், 15 ஆயிரம் கோடி ரூபாய் கடன் நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளது.இதையடுத்து, நடைமுறை மூலதன தேவைகளை சமாளிக்க, ஐந்தாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க, பி.எஸ்.என்.எல்., திட்டமிட்டுள்ளது.அத்துடன், 1 லட்சத்து 76 ஆயிரம் ஊழியர்களில், 35 ஆயிரம் பேருக்கு, 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், தன்விருப்ப ஓய்வு திட்டத்தையும் செயல்படுத்தும் என, தெரிகிறது.


ஏற்கனவே, ஊழியர்களுக்கு, ‘எல்.டி.சி.,’ பயண சலுகை திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அவர்களின் மருத்துவச் சிகிச்சை சலுகை வரம்பும் குறைக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.


இணைய சேவை



இந்நிலையில், ஊழியர்கள் அனைவருக்கும், பிப்ரவரி மாத ஊதியம் பட்டுவாடா செய்யப் பட்டுள்ளதாக, பி.எஸ்.என்.எல்., தெரிவித்துள்ளது. அத்துடன், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க, ‘விங்ஸ்’ மொபைல்போன் செயலியில், 30 நாட்களுக்கு இலவச அழைப்பு மற்றும் இணைய சேவை வழங்குவதாக, அறிவித்தது.

மூலக்கதை