வில்லியாகவும் நடிக்கத் தயார்: அபர்ணிதி

தினமலர்  தினமலர்
வில்லியாகவும் நடிக்கத் தயார்: அபர்ணிதி

நடிகர் ஆர்யா அடுத்த மாதம் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். அவரை டி.வி. நிகழ்ச்சி மூலம் திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட அபர்ணிதி, வசந்தபாலனின் ஜெயில் படத்தில் வடசென்னை பெண்ணாக மேக்அப் போடாமல் நடித்துக் கொண்டிருக்கிறார். சினிமாவில் ஜெயிக்க வில்லியாகவும் நடிப்பேன் என்கிறார். அவர் மேலும் கூறியதாவது:

நான் பிறந்தது கும்பகோணம், ஆனால் அதிக நாள் வாழ்ந்தது சென்னையில். அதனால்தான் ஜெயில் படத்தில் வடசென்னை பெண்ணாக நானே டப்பிங் பேசி நடிக்க முடிந்தது. இந்தப் படத்தில் மேக் இன்றி நடித்திருக்கிறேன். 40 நாள் கால்ஷீட் கொடுத்து நடித்து முடித்துவிட்டேன். பெரும்பாலான காட்சிகளில் நைட்டி, சுடிதார் அணிந்து நடித்திருக்கிறேன்.

படப்பிடிப்பின்போது என்னை பலரும் அடையாளம் கண்டு பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி பார்த்துவிட்டுதான் எனக்கு இந்த வாய்ப்பை வசந்தபாலன் கொடுத்தார். ஆர்யாவை விட்டு ரொம்ப தூரம் வந்து விட்டேன். திரும்ப திரும்ப அதைப் பற்றி பேச விரும்பவில்லை. சினிமாவில் தான் இப்போது தீவிரமாக கவனம் செலுத்துகிறேன். சினிமால ஜெயிக்கணும், அதுக்காக வில்லி கேரக்டராக இருந்தால் கூட நடிப்பேன் என்கிறார் அபர்ணிதி.

மூலக்கதை