டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி பாக். செல்லும் இந்திய அணி?: சம்மேளன நிர்வாகிகள் தீவிர ஆலோசனை
புதுடெல்லி: டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்தை இருநாடுகளுக்கும் பொதுவான இடத்தில் நடத்த அகில இந்திய டென்னிஸ் சம்மேளனம் திட்டமிட்டுள்ளது. டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் வகையிலான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த போட்டி பாகிஸ்தானில் தான் நடத்தப்பட வேண்டும்.
ஆனால், பாதுகாப்பு பிரச்னை காரணமாக இந்திய அணி அங்கு செல்ல வாய்ப்பு இல்லை. இதனால், இரு அணிகளுக்கும் பொதுவான இடத்தில் வரும் செப்டம்பர் மாதம் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டியில் வெற்றி பெறும் அணி உலக குரூப் தகுதி சுற்றுக்கு முன்னேறும்.
இதுகுறித்து, அகில இந்திய டென்னிஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் கூறுகையில், ‘‘நாட்டின் சட்டத்திட்டங்கள், விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.
இருப்பினும், இதுகுறித்து அரசிடம் தெரிவிப்போம். எந்த ஒரு விளையாட்டுக் குழுவையும் பாகிஸ்தானுக்கு அனுப்ப அரசு அனுமதி வழங்காது’’ என்றார்.
இதுகுறித்து இந்திய டேவிஸ் கோப்பை கேப்டனும், டென்னிஸ் நட்சத்திரமுமான மகேஷ் பூபதி தெரிவிக்கையில், ‘‘மத்திய அரசு அனுமதி வழங்கும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதற்கு, இந்திய விளையாட்டுக்குழு தயாராக உள்ளது’’ என்றார்.