மீண்டும் நம்பிக்கையுடன் அஞ்சலி
தமிழ் சினிமாவில் நம் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் இருக்கும் நடிகைகளில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய நடிகையாக இருப்பவர் அஞ்சலி.
2007ம் ஆண்டு வெளிவந்த 'கற்றது தமிழ்' படம் மூலம் அறிமுகமாகி, பல படங்களில் நடித்தாலும் “அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, தரமணி'' ஆகிய படங்களால் அதிகம் பேசப்பட்டவர்.
கடந்த சில வருடங்களாகவே தமிழா, தெலுங்கா என்ற குழப்பத்தில் தமிழில் ஒரு நிலையான இடத்தில் அவரால் இருக்க முடியவில்லை. இப்போது தமிழில் மீண்டும் ஒரு இடத்தைப் பிடிக்கும் நோக்கத்தில் காத்துக் கொண்டிருக்கிறார். அவர் நடித்துள்ள 'பேரன்பு' படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. அந்தப் படத்திற்குப் பிறகு 'நாடோடிகள் 2' படம் வெளிவர உள்ளது. இவை தவிர மேலும் சில புதிய படங்களில் நடித்து வருகிறார்.
பொங்கல் சமயத்தில் உடல் இளைத்த தன்னுடைய புதிய தோற்றத்துடன் அட்டகாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு, டிவி பேட்டியிலும் கலந்து கொண்டு தான் உடல் இளைத்ததைப் பற்றி தெரிவித்தார். அடுத்தடுத்து புதிய படங்கள் வர உள்ளதால் தமிழ் சினிமாவில் இழந்த தன்னுடைய பெயரை மீண்டும் மீட்கும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.