நிதி பிரச்னைக்கு தீர்வு காண ‘ஜெட் ஏர்வேஸ்’ ஆலோசனை

தினமலர்  தினமலர்
நிதி பிரச்னைக்கு தீர்வு காண ‘ஜெட் ஏர்வேஸ்’ ஆலோசனை

புதுடில்லி : ‘நிதி நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது’ என, ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம், 2018 மார்ச் முதல், தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக, தலா, 1,000 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வருகிறது. விமானிகள், பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஊதிய நிலுவை வைத்துள்ளது. இதையடுத்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனரும், அதன் தலைவருமான, நரேஷ் கோயல், தன் வசமுள்ள, 51 சதவீத பங்குகளில், 25 சதவீதத்தை, ‘எதியாட் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்திற்கு விற்க உள்ளதாக தகவல் வெளியானது.

அத்துடன், தலைவர் பொறுப்பில் இருந்தும் நரேஷ் கோயல் விலகுவார் என, கூறப்பட்டது. ஆனால், இது குறித்து, எதியாட் ஏர்லைன்ஸ் கருத்து எதுவும் கூறவில்லை. இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

ஜெட் ஏர்வேஸ் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைமையிலான வங்கி குழு, இதர கடன்தாரர்கள் மற்றும் பங்கு முதலீட்டாளர்கள் இடையே ஆலோசனை நடைபெற்று வருகிறது. நிறுவனத்தில், பிற நிறுவனங்கள் மூலம் மேற்கொண்டு பங்கு முதலீடு செய்வது, இயக்குனர் குழுவை மாற்றி அமைப்பது, சிக்கனத்தை கடைப்பிடித்து கடன்களை குறைப்பது, சொத்துக்களை விற்பனை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து, விவாதிக்கப்படுகிறது.

விரைவில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை புத்துயிரூட்டுவதற்கான தீர்வு திட்டம் உருவாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை