புரோ கபடி பைனலுக்கு முன்னேறுவது யார்? குஜராத்-உ.பி., இன்று பலப்பரிட்சை

தமிழ் முரசு  தமிழ் முரசு
புரோ கபடி பைனலுக்கு முன்னேறுவது யார்? குஜராத்உ.பி., இன்று பலப்பரிட்சை

மும்பை: புரோ கபடி லீக் போட்டியில், பைனலுக்கு முன்னேறும் அணிக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத்- உ. பி. அணிகள் இன்று பலப்பரிட்சை நடத்துகின்றன.

புரோ கபடி லீக் தொடர் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இறுதிப் போட்டிக்கான 2வது தகுதி சுற்று ஆட்டம் மும்பையில் இன்று நடக்கிறது.

இதில், குஜராத் மற்றும் உ. பி. , அணிகள் மோதுகின்றன.   உ. பி. , அணி தட்டுத் தடுமாறி தான் லீக் சுற்றுக்கான போட்டிகளில் விளையாடியது.    ஒரு வழியாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்த இந்த அணி வெளியேற்றுதல் சுற்று ஆட்டங்களில் முன்னாள் சாம்பியன் மும்பை, டெல்லி ஆகிய அணிகளை வென்றது. இதன்மூலம் 2வது தகுதி சுற்று போட்டிக்குள் நுழைந்துள்ளது.



இன்று நடைபெறும் போட்டியில், குஜராத்தை வெல்லும் பட்சத்தில் உ. பி. , அணி இறுதி போட்டிக்கு தகுதிபெறும். உ. பி. , அணி கடைசியாக நடந்த 8 போட்டிகளில் தோல்வியை சந்திக்கவில்லை.

எனவே, இதே உற்சாகத்துடன் குஜராத் அணியை சந்திக்க உள்ளது.   இத்தொடரில், குஜராத் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த அணி லீக் ஆட்டங்களில் 17 வெற்றி, 3 தோல்வி, 2 டிரா கண்டுள்ளது.

இதன்மூலம், ‘ஏ’ பிரிவில்  முதலிடம் பிடித்தது.

பலமான அணியாக விளங்கிய குஜராத், முதலாவது தகுதி சுற்றில் பெங்களூருவிடம்  தோல்வி அடைந்தது.

எனவே, 2வது தகுதி சுற்றில் குஜராத் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இரு அணிகளும் லீக் ஆட்டத்தில் ஒருமுறை சந்தித்துள்ளன.

இதில், குஜராத் அணி 37-32 என்ற புள்ளி கணக்கில் உ. பி, அணியை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பைனலுக்கு முந்தைய போட்டி என்பதால் இரு அணிகளும் வெற்றிபெறும் முனைப்பில் களமிறங்கும்.

இதனால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

இப்போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.  

.

மூலக்கதை