புரோ கபடி லீக் பரபரப்பான ஆட்டத்தில் தபாங் டெல்லி வெற்றி

தமிழ் முரசு  தமிழ் முரசு
புரோ கபடி லீக் பரபரப்பான ஆட்டத்தில் தபாங் டெல்லி வெற்றி

கொல்கத்தா:  கொல்கத்தாவில் நேற்று நடந்த புரோ கபடி லீக் தொடரில் தபாங் டெல்லி அணி, பெங்கால் வாரியர்சை 37-31 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி, வெற்றி பெற்றது. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் டெல்லி அணியின் இளம் வீரர் மீரஜ் ஷேய்க் மட்டுமே 13 புள்ளிகள் எடுத்து ஜொலித்தார்.

கடைசி நிமிடத்தில் அவரது சூப்பர் ரெய்ட், அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.   பெங்கால் அணி வீரர்களும் இறுதிவரை இப்போட்டியில் சளைக்காமல் போராடினர். ஆட்டம் துவங்கியதும் முதல் ஒரு நிமிடத்திலேயே பெங்கால் வீரர்கள் 3 புள்ளிகளை எடுத்து மிரட்டி விட்டனர்.

இருப்பினும் உடனடியாக சுதாரித்துக் கொண்ட டெல்லி வீரர்கள் அடுத்த 4 நிமிடங்களில் 4-3 என்ற புள்ளிக்கணக்கில், பெங்காலை பின்னுக்கு தள்ளி விட்டனர்.

ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் பெங்கால் அணி 10-8 என்ற புள்ளிக்கணக்கில் மீண்டும் முன்னிலை பெற்றது. ஆனால் அந்த அணி வீரர்களின் இமாலயத் தவறுகளால் அடுத்த நிமிடத்திலேயே 10-10 என்று டெல்லி அணி முன்னேறியது.

ஆட்ட இடைவேளையின் போது 20-14 என்ற புள்ளி கணக்கில் டெல்லி முன்னிலையை தக்க வைத்துக் கொண்டது. 39வது நிமிடத்தில் இரு அணிகளுமே 31-31 என்று சமநிலையில் இருந்தன.

கடைசி நிமிடத்தில் மீரஜ் ஷேய்க்கின் சிறப்பான ரெய்டால் டெல்லி அணி, ‘த்ரில்’ வெற்றி பெற்றது இப்போட்டியில் பெங்கால் அணி வீரர் மனீந்தர் சிங், அதிகபட்சமாக 9 புள்ளிகள் எடுத்தார். பிளே ஆஃப் சுற்றுக்கு இரு அணிகளுமே ஏற்கனவே  தகுதி பெற்றுள்ளன.

22 போட்டிகளில் தபாங் டெல்லி 68 புள்ளிகள் எடுத்து, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

.

மூலக்கதை