ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் நாளை தொடக்கம் சாதனை படைக்குமா இந்தியா

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் நாளை தொடக்கம் சாதனை படைக்குமா இந்தியா

அடிலெய்டு:  ஆஸ்திரேலியாவில் நாளை தொடங்கும் டெஸ்ட் தொடரில், வெற்றிபெறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. தொடரை கைப்பற்றும் பட்சத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பெருமை இந்திய அணிக்கு கிடைக்கும்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி-20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்திருந்தது. இந்நிலையில், இரு அணிகளும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன.

முதல் போட்டி அடிலெய்டில் நாளை தொடங்குகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை இந்தியா வென்றதில்லை.


எனவே, இத்தொடரில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள மைதானங்கள் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும்.

எனவே, பந்து வீச்சாளர்கள் அதிக கவனம் செலுத்தவுள்ளனர்.

கடந்த 70 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய 44 டெஸ்டில் 5ல் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

ஒருமுறை கூட தொடரை கைப்பற்றியதில்லை. தற்போது பார்மில் உள்ள கோஹ்லி தலைமையில் களமிறங்கும் இந்திய அணி, ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் பலவீனமடைந்துள்ள ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சாதனை படைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். 2014ல் இந்திய அணியின் ஆஸி.

சுற்றுப்பயணத்தில் கோஹ்லி 4 போட்டியில் 692 ரன் விளாசினார். சக வீரர்கள் ஒத்துழைக்காததால் இந்தியா 0-2 என தொடரை இழந்தது.

நடப்பு டெஸ்ட் சீசனில் 18 இன்னிங்சில் விளையாடி உள்ள கோஹ்லி 1,063 ரன் குவித்து சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கிறார்.

சக பேட்ஸ்மேன்கள் விராட் கோஹ்லிக்கு கை கொடுக்கும் பட்சத்திலும், சிறப்பாக பந்து வீச்சை வெளிப்படுத்தினால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்று சாதனை படைக்க முடியும்.

எனவே, நாளை தொடங்கும் டெஸ்ட் போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


.

மூலக்கதை