பள்ளி கட்டடம் கட்ட உதவிய மகேஷ்பாபு
நடிகர் மகேஷ்பாபுவும், அவரது மனைவி நம்ரதாவும் சமூக சேவைகளில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில், கொடிய நோயினால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு மருத்துவ உதவிகள் செய்து வருவதோடு, கடந்த ஆண்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இரண்டு கிராமங்களை தத்தெடுத்தனர். அந்த கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பராமரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தற்போது ஆந்திராவிலுள்ள புர்ரிப்பாளம் என்ற பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை சீரமைக்கும் பணிகளுக்காக ஒரு தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார் மகேஷ்பாபு. அந்த கட்டடம் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதனால் பிப்ரவரி 27-ந்தேதி நடக்கும் விழாவில் கலந்து கொண்டு, புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள வகுப்பறைகளை திறந்து வைக்கிறார் மகேஷ்பாபு.