சந்தாதாரர் பணத்தை திரும்ப தர அனில் அம்பானிக்கு, ‘டிராய்’ உத்தரவு
புதுடில்லி : மொபைல் போன் சந்தாதாரர்களின் பயன்படுத்தப்படாத தொகையை திரும்ப அளிக்குமாறு, அனில் அம்பானியின் ‘ஆர்காம்’ நிறுவனத்திற்கு, ‘டிராய்’ உத்தரவிட்டுள்ளது.
‘ஆர்காம்’ எனப்படும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், கடன் நெருக்கடி காரணமாக. அதன் மொபைல் போன் சேவையின் ஒரு பகுதியை, 2017, டிச., 1ல் நிறுத்தியது. இதனால், பாதிக்கப்பட்ட ஏராளமான சந்தாதாரர்கள், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’யிடம் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து, டிராய், ஆர்காம் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள கடிதம்: தொலை தொடர்பு சேவை நிறுத்தப்பட்டதால், ஏராளமானோர், மொபைல் போன் சேவையை தொடர முடியாமலும், வேறு நிறுவனத்திற்கு இன்னும் மாறாமலும் உள்ளனர். அதனால், ‘போஸ்ட் பெய்டு, பிரீபெய்டு’ வாடிக்கையாளர்களின் பயன்படுத்தப்படாத தொகை மற்றும் வைப்புத் தொகையை, சந்தாதாரர்களுக்கு திரும்ப அளிக்க வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, பிப்., 15 – மார்ச், 31க்குள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.