வங்கிகளுக்கு மறு பங்கு மூலதனம் கடன் பத்திர முதிர்வு காலம் மாறுபடும்
புதுடில்லி : மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளுக்கு, மறு பங்கு மூலதன திட்டம் மூலம், 2.11 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளது.இதில், 1.35 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு, கடன் பத்திரங்கள் வெளியிடப்படும்.
இவற்றை, மாறுபட்ட முதிர்வு காலத்தில் வெளியிட, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதனால், முதிர்வு காலத்தில் ஒரே கட்டமாக, மொத்த தொகையை வழங்கும் நெருக்கடி ஏற்படாது என, மத்திய அரசு கருதுகிறது.
இது குறித்து, மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த, 1993 – 94ம் நிதியாண்டில், வங்கிகளுக்கான மறுபங்கு மூலதன திட்டத்தில், ஒரே முதிர்வு கால கடன் பத்திரங்கள் வெளியிட்டு, 5,700 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. அதன்பின், 2006 – 07ல், இந்த கடன் பத்திரங்கள், வங்கிகளின் கட்டாய முதலீட்டு பிரிவிற்கு மாற்றப்பட்டு, அவற்றின் மீது வர்த்தகம் நடைபெற்றது.
இம்முறை, வெவ்வேறு முதிர்வு காலம் கொண்ட கடன் பத்திரங்கள் வெளியிடப்படும். இவற்றில், கட்டாய முதலீட்டு அந்தஸ்து கிடையாது என்பதுடன், வர்த்தகமும் மேற்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.