இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது தெ.ஆப்ரிக்கா

தினகரன்  தினகரன்

செஞ்சுரியன்: இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து 3 டெஸ்ட் போட்டிகள் தொடரை தென்ஆப்ரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. முன்னதாக சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 335 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 307 ரன்னுக்கு (92.1 ஓவர்) ஆட்டமிழந்தது. கேப்டன் விராத் கோஹ்லி அபாரமாக விளையாடி 153 ரன் விளாசினார். விஜய் 46, அஷ்வின் 38 ரன் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, 28 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன் எடுத்திருந்தது. டி வில்லியர்ஸ் 50 ரன், எல்கர் 36 ரன்னுடன் நேற்று முன்தினம் ஆட்டத்தை தொடர்ந்தனர்.இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 141 ரன் சேர்த்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டி வில்லியர்ஸ் 80 ரன் எடுத்து (121 பந்து, 10 பவுண்டரி) ஷமி வேகத்தில் விக்கெட் கீப்பர் பார்திவ் வசம் பிடிபட்டார். எல்கர் 61 ரன் எடுத்து (121 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) ஷமி வேகத்தில் வெளியேறினார். கேப்டன் டு பிளெஸ்ஸி ஒரு முனையில் உறுதியாகப் போராட, டி காக் 12 ரன் எடுத்து ஷமி பந்துவீச்சில் பார்திவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். டு பிளெஸ்ஸி - பிலேண்டர் ஜோடி 6வது விக்கெட்டுக்கு நிதானமாக கட்டை போட்டு, இந்திய வீரர்களின் பொறுமையை சோதித்தது. பிலேண்டர் 26 ரன் (85 பந்து, 2 பவுண்டரி), மகாராஜ் 6 ரன் எடுத்து இஷாந்த் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ரபாடா 4 ரன் எடுத்து ஷமி வேகத்தில் கோஹ்லியிடம் பிடிபட, டு பிளெஸ்ஸி 48 ரன் எடுத்து (141 பந்து, 4 பவுண்டரி) பூம்ரா பந்துவீச்சில் அவரிடமே பிடிபட்டார்.லுங்கி என்ஜிடி 1 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் ஆட்டமிழக்க, தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சில் 258 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (91.3 ஓவர்).இந்திய பந்துவீச்சில் முகமது ஷமி 4, பூம்ரா 3, இஷாந்த் 2, அஷ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 287 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. முரளி விஜய், லோகேஷ் ராகுல் இருவரும் துரத்தலை தொடங்கினர். விஜய் 9 ரன் எடுத்து ரபாடா வேகத்தில் கிளீன் போல்டாக, இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. இதில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே ராகுல் 4 ரன், கேப்டன் விராத் கோஹ்லி 5 ரன் எடுத்து லுங்கி என்ஜிடி பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்தியா 4ம் நாள்  முடிவில் 35 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்திருந்தது. இந்நிலையில் ஆட்டத்தின் கடைசி நாளான இன்று தென்ஆப்ரிக்க அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி திணறியது. ராகுல் ஷர்மா மட்டும் சிறிது நிலைத்து ஆடி 47 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்து வந்த முகமது ஷமி 28 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இந்திய அணி 151 ரன்களுக்கு சுருண்டது. இதனால் தென்ஆப்ரிக்க அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மூலக்கதை